தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள, 550 கிலோ மதிப்புள்ள குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவில் நடப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், குட்கா பொட்டலங்களைச் சட்டப்பேரவைக்குக் கொண்டு சென்று காண்பித்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். “கமிஷன் வாங்கிக்கொண்டு, அதன் விற்பனைக்குப் பச்சைக்கொடி காட்டியவர்களுக்குப் பொறுக்கவில்லை.
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான உரிமையையே பறிக்க நினைத்தார்கள். இந்த வேகத்தை குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டியிருக்கலாம். குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப்போகிறது” என்று அ.தி.மு.க அரசை குற்றம்சாட்டினார் ஸ்டாலின்.
ஆனால் இன்று தி.மு.க ஆட்சியில் அமர்ந்தும் குட்கா விவகாரம் படுஜோராக நடந்துகொண்டிருப்பதாக ஜூனியர் விகடனில் அட்டைப்படக் கட்டுரையாகச் செய்தி வெளிவந்தது. அதன் அடிப்படையில் அமைச்சர் மா.சுப்ரமணியன், `குட்கா எந்தெந்தக் கடையில் விற்கப்படுகிறதோ, அந்தக் கடையை உடனடியாக மூடி சீல் வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் குட்கா இல்லை என்கிற நிலையை ஓரிரு மாதங்களில் உருவாக்கியே தீர வேண்டும்’ என்று கடுமையான உத்தரவைப் பிறப்பித்தார். அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் நாள்தோறும் கிலோ கணக்கில் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் பிடிபட்டுக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், திருச்சி காந்தி மார்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமி புரத்தில் உள்ள குடோனில் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
Also Read: `குடோனில் குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகள்!’ – அதிரடிக் காட்டிய திருச்சி போலீஸ்
இதையடுத்து தனிப்படையினர் மற்றும் காந்திமார்க்கெட் போலீஸார் அந்த இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது, 28 மூட்டைகளில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 550 கிலோ குட்கா பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்து அதனைப் பறிமுதல் செய்தனர். குடோன் உரிமையாளரான ராஜேஷ் என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தொடர்ந்து திருச்சி மாவட்டம் முழுவதும் குட்கா விற்பனையைத் தடுத்து வரும் திருச்சி போலீஸாரை மாநகர காவல் ஆணையர் அருண் வெகுவாக பாராட்டினர். அத்தோடு,தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள குட்கா பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.