கள்ளக்குறிச்சியில் ஏடிஎம் மிஷினில் பஸ் ஓட்டுனர் விட்டுச்சென்ற பணத்தை பத்திரமாக ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் நரியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளிகுமார். அரசு பேருந்து ஓட்டுநரான இவர், திருக்கோவிலூர் மசூதி தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்- ல் கடந்த 6ஆம் தேதி பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது முரளிகுமார் பணம் எடுக்க முயற்சித்தபோது ஏடிஎம் மிஷினில் எந்தவித சத்தமும் வராத காரணத்தால் பணம் வரவில்லை என்று திரும்பி சென்று விட்டார்.

அதன் பிறகு ஏடிஎம்- க்கு பணம் எடுக்க வந்த பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர், ஏடிஎம் மிஷினில் பணம் இருப்பதைக் கண்டுள்ளார். அதை எடுத்து எண்ணிப் பார்த்தபோது 9 ஆயிரம் ரூபாய்க்கு பணம் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பணத்தை எடுத்து வந்து திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் முருகன் ஒப்படைத்து உரியவர் யார் எனக் கண்டுபிடித்து ஒப்படைக்க கோரி இருந்தார்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்டு பணத்தின் உரிமையாளரான முரளிகுமாரிடம், முருகன் முன்னிலையில் திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாபு வழங்கினார். நேர்மையாக நடந்து கொண்ட முருகனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.