”சார்பட்டா பரம்பரைக்கு படக்குழு கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது” என நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார்.
சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் பாராட்டி வருகிறார்கள். தமிழ் சினிமாவின் சிறந்த ஸ்போர்ட்ஸ் படங்களில் ஒன்றாகவும் விமர்சகர்கள் பட்டியலிட்டுள்ளார்கள். ஆர்யா, துஷாரா விஜயன், ஜான் கொக்கன், ஷபீர், ஜான் விஜய் ஆகிய நடிகர்களின் பெயர்களே மறந்துவிட்டு கபிலன், மாரியம்மாள், வேம்புலி, டான்சிங் ரோஸ், டேடி போன்ற கதாபாத்திரங்களின் பெயர்களே நம் மனதில் நிற்கும் அளவிற்கு திரைக்கதையை சுவாரசியமாக வடிவமைத்திருப்பார் இயக்குநர் பா.ரஞ்சித்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது, ‘சார்பட்டா பரம்பரை’ படத்தைப் பாராட்டியிருக்கிறார். அந்தப் பதிவில் “சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது. வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது. வாழ்த்துகள்” என்று பாராட்டியிருக்கிறார்.