நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள தும்மனட்டி பகுதியில் தோட்டக்கலைத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் அரசு தோட்டக்கலைப் பண்ணை இயங்கி வருகிறது. முன் மாதிரி சாகுபடி மற்றும் பண்ணை பராமரிமிப்பில் விவசாயிகளுக்கு புதிய யுக்தியைப் பயிற்றுவிக்கும் இந்தப் பண்ணை, கார்னேசன் மலர் நாற்று உற்பத்தி மற்றும் கொய்மலர் சாகுபடிக்கு புகழ்வாய்ந்த பண்ணையாக விளங்கி வந்தது.
Also Read: தோட்டக்கலை பயிர்கள் பற்றிய A டு Z தகவல்கள்… அழைக்கும் தேசிய தோட்டக்கலை கண்காட்சி!
கொரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் இரண்டாவது ஆண்டாகக் கொய்மலர் சாகுபடி பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், முதல் முறையாகத் தோட்டக்கலைத்துறையின் மூலம் இந்தப் பண்ணையில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி மேற்கொள்ள புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புது முயற்சி குறித்து நம்மிடம் விளக்கிய அரசு தும்மனட்டி தோட்டக்கலைத்துறை பண்ணை மேலாளர் சத்தியஸ்ரீ, “புனேவிலிருந்து `நபிலா’ மற்றும் `வின்டர்மான்’ ஆகிய இரண்டு வகையான ஸ்ட்ராபெர்ரி நாற்றுகளை வரவழைத்து, நமது பண்ணணையில் உள்ள பசுமைக் குடிலில் நடவு செய்தோம். தற்போது பசுமைக் குடில் முழுக்க 12,000 ஸ்ட்ராபெர்ரி செடிகள் உள்ளன. தற்போது செடிகள் வளர்ந்து காய்க்கத் தொடங்கியுள்ளன. நாள் ஒன்றுக்கு சுமார் 100 கிலோ வரை பழங்களை அறுவடை செய்து வருகிறோம்.
Also Read: 1,325 ஹெக்டேர் நிலத்தில் இயற்கை விவசாயம்; விவசாயிகளை அழைக்கும் தோட்டக்கலைத்துறை!
ஒரு கிலோ பழத்தை ரூ.175-க்கு விற்பனை செய்கிறோம். அரசு பழவியல் நிலையம் மற்றும் டேன்ஹோடா மூலம் நேரடியாக விற்பனை செய்கிறோம். மேலும் பண்ணைக்கு நேரடியாக வந்து பழங்களைக் கேட்போருக்கும் விற்பனை செய்து வருகிறோம். ரசாயனங்களைப் பெரும்பாலும் தவிர்த்து பஞ்சகவ்யம், தசகவ்யம் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகிறோம். எங்களின் சாகுபடி முறையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.