ஒன்றிய அரசு எனக் கூறுவதற்கு தடை விதிக்க மறுப்பு: மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறுவதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்திருக்கிறது. முதல்வரும், அமைச்சர்களும் இவ்வாறுதான் பேச வேண்டும் என உத்தரவிட முடியாது என விளக்கமளித்திருக்கிறது.

குழந்தைகளுடன் நேரம் செலவிட பெற்றோருக்கு அறிவுரை: குழந்தைகளுடன் பெற்றோர் நேரம் செலவிட்டால், ஆன்லைன் விளையாட்டில் குழந்தைகள் அடிமையாவதை தடுக்கலாம் எனவும், செல்போனிலேயே மூழ்கி கிடப்பதால் மாணவர்கள் மத்தியில் கோபம், தற்கொலை மனநிலை உருவாகி வருவதாகவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.

12 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய காப்பகம்: மதுரையில் குழந்தைகளை சட்டவிரோதமாக விற்ற காப்பகத்தின் நிர்வாகியைத் தேடி சென்னையில் தனிப்படை போலீஸ் முகாமிட்டுள்ளனர். 12ஆண்டுகளாக அனுமதியின்றி காப்பகம் இயங்கியது அம்பலமானதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எம்.ஃபில் படிப்பை தொடர முடிவு: சென்னை பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்.ஃபில் படிப்பை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு: வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 3 மாதங்களுக்குப் பிறகு உயர்ந்துள்ளது. தற்போது 825 ரூபாயில் இருந்து 850 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பப்ஜி மதன் ஜாமீன் மனு – பதிலளிக்க உத்தரவு: பப்ஜி மதனின் ஜாமீன் மனு மீது வரும் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என சைபர் கிரைம் காவல்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக இபிஎஸ் அறிவுரை: சென்னையை சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டபோது, உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.

விதிகளை மீறினால் தானியங்கி முறையில் அபராதம்: சென்னையில் சிக்னலில் விதிகளை மீறுவோர் இனி தப்ப முடியாது. வாகன ஓட்டிகளுக்கு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் புதிய தளர்வுகள் – நாளை ஆலோசனை: தமிழகத்தில் மேலும் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்படும்? என மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

ஏடிஎம் கொள்ளை – விசாரணையில் புதிய தகவல்: பைக் ஓட்டினால் பணம் தருவதாக கூறியதாலேயே தமிழகம் வந்ததாக ஏடிஎம் கொள்ளையில் கைதான வீரேந்தர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஏடிஎம் கொள்ளையின்போது அமீருடன் பைக் ஓட்டிச்சென்றதாக போலீசாரிடம் அவர் கூறியுள்ளார்.

திருப்பூர் – வடமாநில தொழிலாளர்களுக்கு பரிசோதனை: சிறப்பு ரயில்கள் மூலமாக திருப்பூர் வரும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியான பின்னரே வேலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

ஓட்டுநர் உரிமம் – புதிய விதிகள் அமலுக்கு வரவில்லை: அரசு அங்கீகரித்த ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியிலேயே ஓட்டுநர் உரிமம் பெறும் திட்டம் தமிழகத்தில் அமலுக்கு வரவில்லை. கடலூரில் பழைய முறையிலேயே RTO அலுவலகங்களில் ‘8’ போட்டால்தான் ஓட்டுநர் உரிமம் தரப்படுகிறது.

8 முக்கிய துறைகளின் வளர்ச்சி 16.8%: நாட்டின் 8 முக்கிய துறைகள் மே மாதத்தில் 16 புள்ளி 8 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு விழா: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு விழா தலைநகர் பெய்ஜிங்கில் கண்கவர் நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.