சேலம் அருகே வழித்தட பிரச்னையால் சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் 4 மணி நேரமாக போராட்டம் நடத்தினர்.
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள மலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன் (70). இவருக்கும் இவரது சகோதர்களான ஐயம்பெருமாள், நாச்சிகவுண்டர் ஆகியோருக்கும் இடையே ஐந்து ஆண்டுகளாக 12 அடி உள்ள வழித்தட பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வழித்தடத்தை சகோதரர்கள் மூவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், அய்யனாரப்பனுக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று அய்யனாரப்பன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அப்போது அவரது உடலை நெய்க்காரப்பட்டியில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் செல்லும்போது, சகோதரர்கள் வழித்தடத்தை பயன்படுத்தக்கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
பின்னர் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி மோதல்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து வழித்தட பிரச்னை முடியும் வரை உடலை எடுக்க மாட்டோம் என்று கூறி, பிரச்சினைக்குரிய வழித் தடத்திலேயே அய்யனாரப்பனின் உடலை வைத்துவிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு கண்டனர்.
சுமார் 4 மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு உடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் இப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.