இயக்குநர் சிவக்குமாரிடம் இருந்த காணாமல் போன உறுதிமொழி பத்திரங்கள் யாரிடமாவது இருந்தால் விஷாலிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று தயாரிப்பாளர் ஆர்.பி சௌத்ரி கேட்டுக்கொண்டுள்ளார்.
வாங்கிய கடனை செலுத்திய பிறகும் உறுதிமொழி பத்திரங்களைத் தராமல் இழுத்தடிப்பதாகவும், இதுதொடர்பாக மேலும் மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மீது தி.நகர் துணை ஆணையரிடம் விஷால் புகார் அளித்திருந்தார். அதற்கு இன்று அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ள தயாரிப்பாளர் ஆர்.பி சௌத்ரி “விஷால் கொடுத்த பத்திரங்களை இயக்குநர் சிவக்குமாரிடம் கொடுத்து வைத்திருந்தேன். ஆனால், திடீரென்று இறந்துவிட்டார். அவர் திருமணமாகாதவர் என்பதால் தனிநபராக அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வந்தார். ஆனால், அவரிடம் கொடுத்து வைத்திருந்த உறுதி மொழி பத்திரங்கள் கிடைக்கவில்லை. எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவருக்கு தெரிந்த நபர்களிடம் விசாரித்தும் இன்றுவரை கிடைக்கவில்லை.
இதை, விஷாலுக்கும் தெரியப்படுத்தினேன். அந்த உறுதிமொழி பத்திரங்கள் குறித்து விஷால் காவ்லதுறையில் புகார் அளித்தது மிகவும் சரியானது என கருதுகிறேன். ஆனால், அவர் என்னிடமும் கலந்துபேசி புகார் அளித்திருந்தால் தெளிவாக இருந்திருக்கும். விஷால் தயாரித்து இயக்கும் துப்பறிவாளன் -2 திரைப்படத்தின் சாட்டிலைட் டிஜிட்டல் உரிமையின்மீது என்னிடம் ஃபைனான்ஸ் வாங்கியுள்ளார். இன்றுவரை வட்டியும் அசலும் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இரும்புத்திரைப் படத்தின் உறுதிமொழி பத்திரங்களை வைத்து நான் மோசடி செய்வதாக விஷால் புகார் அளித்திருப்பது வேதனை அளிக்கிறது.
இதுவரை, 4 மொழிகளில் 92 திரைப்படங்கள் தயாரித்துள்ளேன். என்னுடைய நாற்பாதாண்டு கால வாழ்க்கையில் இப்படியொரு புகாரை சந்திப்பது இதுவே முதல்முறை. என்னுடைய இந்த அறிக்கையின் தாமதத்திற்கு காரணம் வெளியூரில் இருந்தேன். சென்னை திரும்பிய தற்போது இந்த தன்னிலை விளக்கத்தை அளிக்கிறேன். சிவக்குமாரிடமிருந்த உறுதிமொழிப்பத்திரங்கள் யாரிடமாவது இருந்தால் என்னிடமோ, காவல்துறையிடமோ, விஷாலிடமோ ஒப்படைக்கவேண்டும். மீறினால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.