கொரோனா மற்றும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தத்தளிப்போருக்கு கரம் கொடுத்து வருகிறது புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை. எளியோரை கரைசேர்க்க உதவி வருகின்றனர் பல்வேறு தன்னார்வலர்கள்.
கோவில்பட்டி, தூத்துக்குடி சென்னையில் உதவி கோரியிருந்த 15 குடும்பங்களுக்கு, ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அரிசியை துளிர்க்கும் நம்பிக்கை குழுவினர் வழங்கினர். அதே போல், சென்னை நொலம்பூர் பகுதியை சேர்ந்த பிள்ளையார் என்பவர் 10 ஆயிரம் ரூபாய், பெங்களூர் சேர்ந்த மணிவண்ணன் 20 ஆயிரம் ரூபாய், சென்னை சேர்ந்த ரங்கராஜன் 15 ஆயிரம் ரூபாய், செந்தில்குமார் 10 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்கியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 5 குடும்பத்தினருக்கு நகராட்சி ஆணையர் வசந்தி ஏற்பாட்டில், திமுக பிரமுகர் மூர்த்தி ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை வழங்கினார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குப்பனம்பட்டியை சேர்ந்த பிச்சையம்மாள் என்பவர் இரண்டு மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் தனது வீட்டிற்கு உதவ வேண்டும் என கோரியிருந்த நிலையில், ஜூனியர் சேம்பர் மணவை கிங்க்ஸ் அமைப்பினர் ஒரு மாதத்திற்கான அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினர்.
பெரம்பலூரில் ஊரடங்கால் வருமானமின்றி தவித்துவந்த 40 கலைக்கூத்து கலைஞர்களின் குடும்பங்களுக்கு துளிர்க்கும் நம்பிக்கை மூலமாக 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை அஸ்வின்ஸ் குழுமத்தலைவர் KRV கணேசன் வழங்கினார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டை, பிள்ளாபாளையம் கிராமங்களை சேர்ந்த நான்கு குடும்பங்களுக்கு கிராமியம் தொண்டு நிறுவனம் சார்பில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சம்மந்தபுரம் கிராமத்தில் 3 குடும்பங்களுக்கு மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் மற்றும் நண்பர்கள் இணைந்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 15 நாட்களுக்கு தேவையான அரிசி, மளிகை உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்ற மாற்றுத் திறனாளிக்கு தன்னார்வலர்களான உஷாராணி, கணேசன் ஆகியோர் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினர்.
– புதிய தலைமுறையின் ‘துளிர்க்கும் நம்பிக்கை’ உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த சில கோரிக்கைகளை ஏற்று செய்யப்பட்ட சிறு உதவிகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால், 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.
உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க… ‘புதிய தலைமுறை’ முன்னெடுப்பில் ‘துளிர்க்கும் நம்பிக்கை’