நீலகிரி மாவட்டத்தின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கூடுதல் எஸ்.பி-யாகப் பணியாற்றிவந்தவர் சார்லஸ். இவர் ஈரோடு மாவட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவில் பொறுப்பு வகித்துவந்தபோது, அங்கு பணியிலிருந்த பெண் காவலர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் காவலர் தலைமைச் செயலகத்துக்குப் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில்,பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததற்கான முகாந்திரம் இருப்பதைக் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, சார்லஸை சஸ்பெண்ட் செய்து கூடுதல் முதன்மைச் செயலர் பிரபாகர் உத்தரவிட்டார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புப் பிரிவில் பொறுப்புவகித்த காவலரே அத்துமீறிப் பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்துத் தெரிவித்த காவல்துறை வட்டாரங்கள், “பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சஸ்பெண்ட் உத்தரவு கோவை சகர டி.ஐ.ஜி வாயிலாக நீலகிரி எஸ்.பி-க்கு வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்ட புதிய எஸ்.பி இன்னும் பொறுப்பு ஏற்காத நிலையில், எஸ்.பி-யாகப் பொறுப்புவகிக்கும் கூடுதல் எஸ்.பி மூலமாக இந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இவரது விசாரணைக் காலம் முடியம் வரை நீலகிரி மாவட்டம் தவிர, வேறு மாவட்டத்துக்கு இவர் செல்லக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கூடுதல் எஸ்.பி சார்லஸ், இதற்கு முன்பு கோவை, பொள்ளாச்சி, பவானி போன்ற பகுதிகளில் பணியாற்றியுள்ளார்” என்கின்றன.