மதுரையில் அரசு உத்தரவின்பேரில் பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டு மனைகள், கண்மாய் பகுதியில் இருப்பதாக கூறி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வீட்டுமனை வழங்கும் நடவடிக்கைக்கு தடை விதித்தும், இதற்கு தலைமைச் செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உட்பட பல மாவட்டங்களில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
சலுகை விலையில் வீட்டு மனையைப் பத்திரிகையாளர்கள் பெறுவதற்கான தகுதிகள் என்னவென்பதை, இது சம்பந்தமாக தொடரப்பட்ட ஒரு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெளிவுபடுத்தியிருந்தது.
இந்நிலையில் மதுரையில் பத்திரிகையாளர்கள் வீட்டுமனைக்காக ஒதுக்கப்பட்ட இடம் புதுக்குளம் கண்மாய்ப்பகுதி என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு மதுரையைச் சேர்ந்தவர் புகார் அனுப்பியிருந்தார்.
மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், “நீர் நிலைகளை வேறு எந்த காரணத்துக்காகவும் பயன்படுத்தக் கூடாது. இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டதுடன் இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் பதில் அளிக்க வேண்டுமென்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையடுத்து வருவாய்த்துறை நில விடுவிப்பு பிரிவு அரசாணைகள் GO (Ms) No 329/2020, GO (Ms) No 76/2019 மதுரை மாட்டுதாவணி மற்றும் புதுக்குளம் கண்மாய் சர்வே 134/2, 134/2A நில ஒதிக்கீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.