மரணிப்பவரின் முகத்தைக்கூட கடைசியாக ஒருமுறை பார்க்கவிடாத துயரத்தைக் கொடுத்திருக்கிறது கொரோனா. உறவினர்களை விலக்கி வைத்து உடலைக் கையாளும் நடைமுறை கண்கலங்க வைக்கிறது. `இயல்பு வாழ்க்கைக்கு எப்போது திரும்பப் போகிறோம்’ என்று நினைப்போருக்கு மத்தியில், சிலரது வாழ்க்கையை நிரந்தரமாக இருட்டுக்குள்ளேயே சிறை வைத்திருக்கிறது, இந்தக் கொடிய தொற்று. நெஞ்சைப் பதற வைக்கக்கூடிய அப்படியொரு துயரச்சம்பவம், வேலூரில் நடந்திருக்கிறது.
வேலூர் காட்பாடியிலுள்ள டாஸ்மாக் எலைட் மதுக்கடையில் பணிபுரிந்து வந்தவர் சிவராஜ் (வயது 45). இவரின் மனைவி பாமா (38). இந்தத் தம்பதிக்கு 10 வயதில் இமான், 7 வயதில் ஜோயல் என இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிவராஜும், அவரின் மனைவியும் வேலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் சிவராஜ் 24-ம் தேதி உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அவரின் மனைவி பாமாவும், கணவன் இறந்ததுகூட தெரியாமல் நேற்று முன்தினம் உயிரிழந்துவிட்டார். தாய், தந்தையைப் பறிகொடுத்த இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் நிர்க்கதியாகத் தவிக்கிறார்கள். `இப்படியொரு துயரம் எதிரிக்கும்கூட வரக்கூடாது’ என்று குழந்தைகளின் நிலையைக் கண்டு கதறித் துடிக்கிறார்கள் உறவினர்கள்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பெரியசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கோரிக்கை மனு ஒன்றையும் அனுப்பியிருக்கிறார். அதில், “கொரோனா தொற்றுக்கு டாஸ்மாக் பணியாளர் சிவராஜ் மற்றும் அவரின் மனைவி பாமா இறந்துள்ளனர். அவர்களுடைய குடும்பத்தினருக்கு நிவாரண உதவி அளிக்க வேண்டும். தாய், தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.