தன் மகன் திடீரென உயிரிழக்க, அதனால் அதிர்ச்சியான அவரின் தாய், `இனி என் மகன் இல்லாம நான் எப்படி வாழ்வேன்…’ என்று மயங்கி விழுந்து இறந்த சம்பவம், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் – திண்டுக்கல் சாலையில் உள்ள மகா செல்வ விநாயகர் கோயில் பரம்பரை அறங்காவலர் சரவணன் சிவாச்சாரியார். இவரின் தாய் கிரிஜாம்பாள் (வயது 76). மகன் மேல் தாயும், தாய் மீது மகனும் அதீத பாசமாக இருந்திருக்கிறார்கள். மகன் வீட்டுக்கு வந்து சாப்பிட்ட பிறகே தாயும் சாப்பிடும் அளவுக்கு மகன் மீது அதிகம் பாசம் காட்டியிருக்கிறார் கிரிஜாம்பாள்.
இந்நிலையில், சரவணன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதைக் கேட்டு அதிர்ச்சியான கிரிஜாம்பாள், `என் மகன் இல்லாம இனி எப்படி நான் உயிர்வாழ்வேன்? அவனைப்போல ஒரு பிள்ளையை இனி பார்க்க முடியாதே’ என்று அழுது அரற்றியிருக்கிறார்.
Also Read: கரூர்: நடுவழியில் பெண்ணுக்கு பிரசவ வலி, பிரசவம் பார்த்த உதவியாளர்… ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை!
இந்த நிலையில், சரவணன் உடலை உறவினர்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைத்திருந்தபோது, உயிரிழந்த சரவணன் சிவாச்சாரியாரின் தாயார் கிரிஜாம்பாள் அழுது கொண்டேயிருந்தார். அப்போது, திடீரென மகனின் உடல் அருகே சென்ற அவர், அப்படியே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மகனின் இறப்பைக் கண்டு அதிர்ச்சியில் தாயாரும் இறந்த சம்பவம் அக்குடும்பத்தில் மட்டுமன்றி, அப்பகுதி மக்கள் மத்தியிலும் மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது. மகனைச் சாவிலும் பிரியாமல் இறந்த அந்த தாயின் இறப்பு, தாய் மகன் மீது வைத்திருந்த பாசப்போராட்டத்தின் சாட்சியாக இருப்பதாக அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.