ஊரடங்கில் உணவுக்குத் தவித்த பிச்சையெடுக்கும் குழந்தைகளுக்கு தனது உணவை வழங்கி நெகிழ வைத்துள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த போக்குவரத்து காவலர்.
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருப்பதால் சாலைகளில் வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள். அப்படி, ஹைதராபாத் சாலைகளில் உணவின்றி தவித்த பிச்சையெடுக்கும் இரண்டு குழந்தைகளுக்கு தனது டிஃபன் பாக்ஸில் இருந்த உணவை அளித்துள்ளார் போக்குவரத்துக் காவலர் மகேஷ். அவர், தான் சாப்பிடக்கொண்டு வந்த உணவை எடுத்து குழந்தைகளை அமரவைத்து தாயுள்ளத்தோடு உணவளிக்கும் வீடியோ சமூக வளைதளங்களில் பாராட்டுக்களைக் குவித்துள்ளது.
#ActOfKindness
Panjagutta Traffic Police Constable Mr. Mahesh while performing patrolling duty @Somajiguda noticed two children requesting others for food at the road side, immediately he took out his lunch box & served food to the hungry children. pic.twitter.com/LTNjihUawn— Telangana State Police (@TelanganaCOPs) May 17, 2021
இதுகுறித்து, போக்குவரத்துக் காவலர் மகேஷ் கூறும்போது, “நான் இதே பகுதியில்தான் தொடர்ந்து பணியில் இருக்கிறேன். இந்தக் குழந்தைகளை அடிக்கடிப் பார்ப்பேன். தனது தந்தையுடன் இணைந்து சாலைகளில் பிச்சை எடுப்பார்கள். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பாதால் உணவினிறி தவித்தார்கள். அதுவும், பலமணிநேரம் உணவின்றி குழந்தைகள் பரிதவித்ததைப் பார்த்து மனம் வேதனையுற்றது. அதனால், எனது உணவை எடுத்துக் கொடுத்தேன். உணவு உண்டபிறகு குழந்தைகளின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி விலைமதிப்பற்றது” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்நிலையில், குழந்தைகளுக்கு உணவளித்த போக்குவரத்துக் காவலர் மகேஷை நேரில் அழைத்து ஹைதராபாத் காவல் ஆணையர் அஞ்சனி குமார் பாராட்டியுள்ளதோடு பரிசையும் அளித்து ஊக்கப்படுத்தியுள்ளார்.