கொரோனா ஊரடங்கு சூழலில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார் நடிகர் விஷால்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான விஷால் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோதான் என்பதை நிரூபிக்கும் விதமாக கொரோனா சூழலில் நலிந்த கலைத்துறையினருக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் உதவி வருவது பாராட்டுக்களைக் குவித்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலையால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தொட்டுள்ளது. இதனால், தமிழக அரசு மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கை அறிவித்துள்ளது. வசதி இருப்பவர்கள் வீடுகளில் தங்கிக்கொள்வார்கள். ஆனால், சாலைகளில் வசிக்கும் மக்களின் துயரத்தை சொல்லவும் வேண்டுமா?
இந்நிலையில்தான், நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் தினமும் சென்னையின் சாலையோரங்களில் வசிக்கும் 500 க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு உணவோடு குடிநீரையும் வழங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல், ஊரடங்கால் உணவின்றி பரிதவிக்கும் கால்நடைகளுக்கும் தனது அறக்கட்டளை மூலம் உணவை வழங்கி வருகிறார். விஷாலின் இந்த மனித நேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.