கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், உலக செவிலியர் தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
Also Read: `12 மணி நேர காத்திருப்பு; டோக்கன் பஞ்சாயத்து!’ – கோவை ரெம்டெசிவிர் குளறுபடிகள் – நேரடி ரிப்போர்ட்
கோவை இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையிலும் உலக செவிலியர் தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, நவீன தாதியலின் நிறுவனரான புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உருவப்படத்துக்கு மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், மருத்துவர்கள், செவிலியர்கள் மலர் தூவி மெழுகுவத்தி ஏந்தி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து செவிலியர்களிடையே பேசிய இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், “நீங்கள் செய்யும் சேவை அளப்பறியது. இதே மருத்துவமனையில் நானும் அட்மிட் ஆனேன். எல்லோரும் அப்படி ஒரு கவனிப்பு. இதனால், எங்களுக்கு நல்ல பெயர் கிடைத்தது.
தமிழகத்திலேயே கொரோனாவுக்கு சிறந்த சேவையை இ.எஸ்.ஐ அளிக்கிறது என்று பாராட்டுகின்றனர். அதற்கு நீங்கள்தான் காரணம். உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் உள்ளது. மிக்க நன்றி. உங்கள் சேவை மனப்பான்மை யாருக்கும் வராது.
மருத்துவர்களின் கட்டளைகள் மற்றும் அறிவுரைகளை ஏற்று பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அருகில் சென்று அணுகும் செவிலியர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள்” எனப் பாராட்டினார். பேசிக்கொண்டிருக்கும்போது உணர்வுவயப்பட்ட முதல்வர் செவிலியர்களின் கால்களில் விழுந்து, “நீங்கள்தான் தற்போதைய சூழலில் கடவுள்’’ எனக் கூறி அழுது கண்ணீர் விட்டார்.
இது அங்கிருந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவையில் சராசரியாக 2,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கடந்தாண்டு தொடங்கி தற்போதுவரை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முக்கிய மருத்துவமனையாக இ.எஸ்.ஐ மருத்துவமனை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.