`சபாநாயகர்’ அப்பாவு!
தமிழக சட்டப்பேரவை தலைவராக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு பதவியேற்று கொண்டார். நேற்று சபாநாயகர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்திருந்த அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவரை அவை முன்னவரான துரை முருகனும், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியும் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
தமிழக சட்டப்பேரவை துணை தலைவராக கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியும் பதவியேற்று கொண்டார்.
`மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை!’
கொரோனா இரண்டாவது அலையில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை அறிவித்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். ஏப்ரல், மே. ஜூன் மாத காலத்துக்காக மருத்துவர்களுக்கு ஊக்க தொகையாக ரூ. 30,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வர். ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் காலமானார்!
சி.பி.ஐ-யின் முன்னாள் எஸ்.பி.யும், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாகவும் செயல்பட்ட ராகோத்தன், கொரோனா தொற்றால் காலமானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72 `ராஜீவ் காந்தி கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்’ என்று கொலை வழக்கு தொடர்பாக புத்தகமும் எழுதி இருக்கிறார்.
இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 3,48,421 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,33,40,938 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,205. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,54,197-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,93,82,642 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 37,04,099 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,55,338 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.
இந்தியாவில் இதுவரை 17,52,35,991 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.