நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தை முடிக்காமல், வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஷங்கர் தற்போது பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் பல உண்மை தகவல்களை மறைத்து லைகா நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அந்த மனுவில், “ முதலில் இந்த படத்தை தில்ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்தார். அவரை சமாதானப்படுத்திய லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க முன்வந்தது. கடந்த 2017 செப்டம்பரில் படத்துக்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்ட நாங்கள் 2018 மே மாதம் முதல் படப்பிடிப்பை துவங்க முடிவு செய்தோம்.

image

படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என பட்ஜெட் போடப்பட்டது. ஆனால் அதனை லைகா நிறுவனம் குறைக்கும்படி கூறியது. அதனை ஏற்று படத்தின் பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தோம். ஆனால் அதன் பின்பும் படப்பிடிப்பை துவங்குவதில் லைகா நிறுவனம் தேவையில்லாத காலதாமதத்தை ஏற்படுத்தியது. இது மட்டுமன்றி அரங்குகள் அமைத்து தருதல், நிதி ஒதுக்கீடில் உள்ளிட்டவற்றில் தயாரிப்பு நிறுவனம் தாமதத்தை ஏற்படுத்தியது.

image

இதுமட்டுமன்றி நடிகர் கமலுக்கு ஏற்பட்ட மேக் அப் அலர்ஜி, கிரேன் விபத்து, கொரோனா தொற்று உள்ளிட்டவற்றாலும் படப்படிப்பு தாமதமானது. ஆகையால் பட தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு நான் பொறுப்பல்ல. வரும் ஜூன் முதல் படப்பிடிப்பை மீண்டும் துவங்க தயாராக இருக்கிறோம். ஆனால் அதனைக்கருத்தில் கொள்ளாத தயாரிப்பு நிறுவனம் எனக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது. 2020 ஜூன் முதல் 2021 மே வரையிலான ஓராண்டு காலத்தை லைகா நிறுவனம்தான் வீணடித்தது.

ஆகையால் லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” இவ்வாறு ஷங்கர் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.