இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் என பல மாநிலங்களிலும் நோய் தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 103 வயதான தாத்தா ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து நலமுடன் மீண்டுள்ளார்.
வீரேந்திர நகர் பகுதியைச் சேர்ந்த ஷாம்ராவ் இங்க்லே தான் அந்த 103 வயது தாத்தா. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் அங்கிருந்த கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நோய் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானதால் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.
அவர் மருத்துவ சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிரித்த முகத்துடன் மருத்துவமனையில் இருந்து வெளிவந்த ஷாம்ராவ் இங்க்லே தாத்தாவிற்கு மருத்துவர்கள் பூங்கொத்து கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.