ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான உரிமைகள் மாநாடு கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் பங்கேற்று தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காக்காசோலை கிராமத்தைச் சேர்ந்த தோட்ட தொழிலாள தம்பதியரான பாக்யராஜ் – சீதாலட்சுமியின் 13 வயது மகன் ராகுல் பங்கேற்று, “இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் இன்னும் மோசமாக இருக்கும். துாய்மையான சூழலுக்கான உரிமையை எங்களுக்கு வழங்க அரசுகள் உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும். பருவநிலை மாற்றம் சிறுவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது” எனப் பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய மாணவன் ராகுலின் தந்தை பாக்யராஜ், “நானும் என்னோட சம்சாரமும் தோட்ட தேயிலை தோட்டத்துல கூலி தொழிலாளியா இருக்கோம். நாங்க பெருசா படிச்சதில்ல.என்னோட பசங்களையும் அரசாங்க பள்ளிக்கூடத்துல படிக்க வச்சிட்டு இருக்கோம். ராகுல் சின்னதுல இருந்தே இயற்கை மேல ரொம்ப ஆர்வமா இருப்பான். இப்போ இதுல கலந்துகிட்டு பேசினது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு” என்றார் மகிழ்வுடன்.
ராகுலுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கேர் டிரஸ்ட் மண்டல பயிற்சியாளர் வினோபா கூறுகையில், “மாணவன் ராகுலிடம் பல்வேறு திறமைகள் இருந்ததால், இவரை ஐ.நா குழந்தைகள் உரிமை மாநாட்டில் பேச பரிந்துரை செய்தோம். மிக சிறப்பாகவே பேசியுள்ளார்” என்றார்.