மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்கு உள்பட்ட ஒரு கிராமத்தில் வளர்ந்து வரும் 13 வயது நிரம்பிய சிறுமி அவள். கள்ளம் கபடமில்லாமல் வளர்ந்த அச்சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை அப்பகுதி சமூக ஆர்வலர்கள் விவரித்தனர்.
அந்த சிறுமியின் தந்தை, குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்க சிரமப்பட்டுள்ளார் தாய். இப்படியான வறுமையான சூழலில் கடந்த 2019 -ம் ஆண்டு அச்சிறுமியின் உறவினரான மேலப்போலகம் கிராமம் தட்டாரத்தெருவைச் சேர்ந்த சாமித்துரை மகன் தினேஷ்குமார் (வயது19) என்பவர் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளார். அங்கு சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தினேஷ்குமார் சிறுமியை திருமணம் செய்து கொள்ளாமல் இழுத்தடித்துள்ளார். இதனால் மனம் நொந்த சிறுமி அங்கிருந்து, மயிலாடுதுறை அருகேயுள்ள சித்தர்காடு கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் சென்று தங்கியுள்ளார்.
அங்கு மயிலாடுதுறை மாப்படுகை, கங்கைநகரைச் சேர்ந்த குருசாமி மகன் முருகவேல் என்பவர் (வயது 36) சித்தர்காட்டில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் சிறுமியின் சகோதரியின் கணவர் ஆவார். இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அவரும் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.
சகோதரியின் கணவராலும் பாதிக்கப்பட்டலாம், அங்கிருந்து பாதுகாப்பு கருதி மங்கைநல்லூரிலுள்ள அண்ணன் உறவு முறையுள்ள சிங்காரவேலன் (வயது 30) என்பவர் வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். அண்ணன் முறையுள்ள சிங்காரவேலனும் பலமுறை அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இச்சூழ்நிலையில் கடும் வயிற்றுவலி காரணமாக சிறுமி, ஹோட்டல் உரிமையாளர் உதவியுடன் மயிலாடுதுறை மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு பரிசோதித்ததில் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரித்ததில் சிறுமி நடந்த சம்பவம் அனைத்தையும் ஒவ்வொன்றாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியின் உறவினர்களான 3 பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உண்மையென தெரிய வந்தது. உடனடியாக 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து தினேஷ்குமார் , முருகவேல், சிங்காரவேலன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்” என்றனர். தற்போது மருத்துவமனையில் இருக்கும் சிறுமி, உடல் நலம் தேறியதும் காப்பகத்தில் சேர்க்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.