இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் வேகம் தீவிரம் அடைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 2.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நோய் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி 16 முதலே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு முன்னெடுத்துள்ளது. கோவாக்சின், கோவிஷீல்ட் என இரண்டு விதமான தடுப்பு மருந்துகள் இந்த பணிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இரண்டு டோஸ்களாக தடுப்பு மருந்து செலுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதுவரை கோவாக்சின் தடுப்பு மருந்து 93,56,436 பேருக்கு முதல் டோஸாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல இரண்டாவது டோஸாக 17,37,178 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
மறுபக்கம் கோவிஷீல்ட் மருந்தை 10,03,02,745 முதல் டோஸாகவும், 1,57,32,754 இரண்டாவது டோஸாகவும் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து செலுத்திக் கொண்ட பின்னரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். கோவாக்சின் மருந்தை முதல் முறை பெற்றவர்களில் 4208 பேரும், இரண்டாம் முறை பெற்றவர்கள் 695 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கோவிஷீல்ட் மருந்தை முதல் முறை பெற்றவர்களில் 17145 பேரும், இரண்டாம் முறை பெற்றவர்கள் 5014 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டாலும் போதிய பாதுகாப்புடன் இருந்தால் மட்டுமே நோய் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என மருத்துவ துறையை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.