விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘கோடியில் ஒருவன்’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
கடந்த 2012-ஆம் ஆண்டு ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. அதிலிருந்து, நடிப்பில் கவனம் செலுத்தி வருபவர், 14 வது படமாக ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில், ஆத்மிகா ஹீரோயினாக நடிக்க அறிமுக இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். வில்லனாக கே.ஜி.எஃப் வில்லன் ’கருடன்’ ராமச்சந்திர ராஜு நடிக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. சமூகத்தில் பின்தங்கிய மக்களின் கல்விக்காக போராடும் துடிப்பான இளைஞராக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.
இந்நிலையில், இப்படத்தின், வெளியீட்டுத் தேதியை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வரும் மே 14 ஆம் தேதி கோடியில் ஒருவன் தியேட்டர்களில் வெளியாகிறது.
அதேநாளில், சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள ‘ராதே’ படமும் ரம்ஜான் அன்றுதான் வெளியாகிறது.