கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்த ஆரம்பித்ததிலிருந்து, அதைப்பற்றி உலக நாடுகள் ஒரே குரலில் சொன்ன ஒரு தகவல், கொரோனா சர்ஃபேஸ் வழியாக, அதாவது பொருள்களின் மேற்பரப்பு வழியாகப் பரவும் என்பது. கொரோனா வைரஸ்தான் ஒட்டிக்கொண்டிருக்கிற பொருள்களின் மீது பல நாள்கள் உயிர் வாழும். அந்தப் பொருள்களைத் தொட்டுவிட்டு அந்தக் கையை நம் முகத்திலோ, கண்களிலோ வைத்தால், கொரோனா தொற்றுக்கு ஆளாக நேரிடும். அதன் காரணமாகத்தான், கைகளை அடிக்கடி சானிடைசரால் சுத்தம் செய்ய வேண்டுமென்று உலக சுகாதார நிறுவனத்தில் ஆரம்பித்து நம் நாட்டுச் சுகாதாரத்துறை வரை அறிவுறுத்தி வந்தன.
இதன் தொடர்ச்சியாகத்தான் அலுவலகங்களை 4 மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமிநாசினியால் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த சில மாதங்களுக்கு முன்பும் சரி, இரண்டாம் அலை ஆரம்பித்திருக்கிற இந்தக் காலகட்டத்திலும் சரி கைகளை அடிக்கடி சானிடைசரால் சுத்தம் செய்வது, நாம் புழங்குகிற இடங்களை அடிக்கடி சுத்தப்படுத்துவது என்று கவனமாகவே இருந்து வருகிறோம்.
இந்நிலையில், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டுத் தடுப்பு மையமான சிடிசி, கொரோனா தொற்று தொடர்பான தன்னுடைய சமீபத்திய வழிகாட்டுதலை வெளியிட்டிருக்கிறது. அதில், அசுத்தமான மேற்பரப்பைத் தொடுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. தவிர, சென்ற வருடம் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தபோது, பல ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் இருமும்போதும் தும்மும்போதும் வெளிப்படுகிற நீர்த்துளிகள் பொருள்களின் மேற்பரப்பின் மீது படிந்துவிடும். அவற்றைத் தொட்டுவிட்டு அந்தக் கைகளால் மூக்கு, கண்கள் போன்ற பகுதிகளைத் தொடும்போது அந்த உறுப்புகளில் இருக்கிற சளி ஜவ்வுகளின் மூலம் கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் நுழைந்துவிடுகிறது என்று சொன்னார்கள்.
Also Read: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றி உங்கள் கருத்து?! #VikatanPoll
ஆனால், கடந்த ஒரு வருட அனுபவத்தில் இந்த வைரஸ் பெரும்பாலும் காற்றின் மூலமாகத்தான் பரவுகிறது என்பது தெரிய வந்திருக்கிறது. அதனால், பொருள்களின் மேற்பரப்பு வழியாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு இனிமேல் ரசாயன கிருமிநாசினிகள் தேவையில்லை. சோப்பும் தண்ணீரும் கொண்டு மேற்பரப்புகளையும் கைகளையும் சுத்தம் செய்தாலே போதும். கூடவே முகக்கவசமும் சமூக இடைவெளியும் மிகவும் அவசியம் என்றிருக்கிறது அந்த வழிகாட்டுதல்.
கவனமாகவே இருப்போம்.