தேனி மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தண்ணீருக்காகவும் உணவிற்காகவும் தவிக்கும் பறவையினங்களுக்கு தன்னார்வல இளைஞர்கள் தினமும் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் மற்றும் அவற்றிக்கான உணவு வைத்து அவற்றை பராமரித்து வருகின்றனர்.
கடந்த மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே கோடை வெப்பம் வாட்டி வதைக்க துவங்கிவிட்டது. அதுவே ஏப்ரலில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இதனால் பறவையினங்கள் தண்ணீர் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றன.
இதை உணர்ந்த தேனியை சேர்ந்த தன்னார்வலர் இளைஞர்கள் தேனி என்.ஆர்.டி. நகர், கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலைய பூங்கா, தொழிற்பேட்டை, கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள மரங்கள், கட்டிட சுவர்களில் பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் அவற்றிக்காக உணவு வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீரை மாற்றியும், உணவுகளை வைத்தும் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பணியை இந்த தன்னார்வலர் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
“கோடை வெயிலால் மனிதர்களுக்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் எங்கேயும் பறவைகள் தண்ணீர் குடிப்பதற்காக வசதிகள் எதுவும் இல்லை. இதனால், பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவர்கள், பட்டதாரி இளைஞர்கள் இணைந்து இந்த களப்பணியை தொடங்கி உள்ளோம். கடந்த ஆண்டு தேனியில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கோடை காலம் முழுவதும் பறவைகளுக்கு தண்ணீர், இரை வைத்தோம்.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் இந்த பணியை மேற்கொள்கிறோம். தினமும், காலை மற்றும் மாலை நேரத்தில் தண்ணீர் மற்றும் இரையை இதில் வைத்து விடுவோம் இது மனநிறைவை கொடுக்கிறது” என்கிறார் தன்னார்வ இளைஞர் குழுவைச் சேர்ந்த ரிஷி.