அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற நான்காவது டெஸ்ட்டின் மூன்றாவது நாளில் இங்கிலாந்தை 135 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து இன்னிங்ஸ் வெற்றிபெற்றிருக்கிறது இந்தியா.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் தொடரில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டை இங்கிலாந்து வெல்ல, சென்னையின் இரண்டாவது டெஸ்ட்டை இந்தியா வென்று தொடரை சமன் செய்தது. அகமதாபாத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட்டிலும் இந்தியா வென்று 2-1 என லீட் எடுத்தாலும் நான்காவது டெஸ்ட்டிலும் வெற்றிபெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்துடன் மோத முடியும் என்கிற நிலை.
இதனால் கடுமையான சவாலுடனேயே போட்டி தொடங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அக்ஸர் பட்டேலும், அஷ்வினும் வழக்கம்போல மிரட்ட 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய பேட்ஸ்மேன்களும் திணறினார்கள். ஆனால், ரிஷப் பன்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அதிரடியால் 365 ரன்களைக் குவித்தது இந்தியா. பன்ட் 101 ரன்கள் அடித்து சென்சூரியன் ஆனார். ஆனால், எதிர்முனையில் எல்லா பேட்ஸ்மேன்களும் அவுட் ஆனதால் 96 ரன்களில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்று சதத்தை தவறவிட்டார் வாஷிங்டன்.
தோல்விக்கான அறிகுறிகளுடனேயே இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் பட்டேல் என இருவரின் ஃபைஃபர்களால் 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் வரும் ஜூன் 18-ம் தேதி நடைபெற இருக்கிறது.