சென்னை அமைந்தகரை வெள்ளாள தெருவைச் சேர்ந்தவர் கமலகண்ணன். இவரின் மனைவி ஜெயந்தி (47). இவர்களின் மகள் மோனிகா (23). கடந்த 26-ம் தேதி வீட்டில் ஜெயந்தியும் மோனிகாவும் தனியாக இருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த இளைஞர்கள் ஜெயந்தியையும் மோனிகாவையும் கத்தியால் குத்தினர். இதில் ஜெயந்தி உயிரிழந்தார். மோனிகா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
என்ன நடந்தது என்று மோனிகா, அமைந்தகரை இன்ஸ்பெக்டர் விவேகானந்தனிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, “நான் சென்னை அமைந்தகரையில்தான் பிறந்தேன். என் தந்தை கமலகண்ணன், ஃபைனான்ஸ், ஆக்டிங் டிரைவராக வேலைப்பார்த்து வருகிறார். நான் பூந்தமல்லியில் உள்ள கல்லூரியில் பிடெக் ஐடி இறுதி ஆண்டு படித்து வருகிறேன். கொரோனா காலம் என்பதால் வீட்டிலிருந்து படித்து வருகிறேன். அதனால் பெருங்களத்தூரில் கடந்த 5 மாதங்களாக வேலை செய்து வருகிறேன்.
26-ம் தேதி காலை 8 மணிக்கு இரவு பணி முடிந்து வீட்டிற்குள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன். மதியம் 12 மணியளவில் என்னை யாரோ கழுத்தைப் பிடித்து அடித்தான். உடனே தூங்கிக் கொண்டிருந்த நான் கண்விழித்தேன். அப்போது சுமார் 35 வயது மதிக்கதக்க நபர் என்னை அழுத்தி பிடித்து கையிலும் முகத்திலும் கத்தியால் குத்தினான். நான் சுதாரித்துக் கொண்டு எழுந்தபோது என்னைக் கத்தியால் குத்தியவன் ஓடிவிட்டான். நான் சத்தம் போட்டுக்கொண்டே கிச்சன் பக்கம் பார்த்தபோது சுமார் 23 வயது மதிக்கதக்க நபர் என் தாயார் ஜெயந்தியை கத்தியால் வயிற்றிலும் முகத்திலும் கன்னத்திலும் மற்றும் இருகைகளிலும் கத்தியால் குத்திக் கொண்டிருநந்தான்.
Also Read: தென்காசி: பேத்தியுடன் மூதாட்டி கொடூரக் கொலை; 40 நாள்களுக்குப் பின் 5 பேர் கைது! என்ன நடந்தது?
அவன் கத்தியால் அம்மாவை அறுக்க முற்பட்டதைப் பார்த்த நான் சத்தம் போட்டேன். அதனால் அவன் என்னை தள்ளிவிட்டு ஓடிவிட்டான். அதன்பிறகு என் தாயார் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். என் தாயாரின் மீது எந்த துணியும் இல்லை. என்னை தாக்கியவனிடம் கத்தி சிறியதாக இருந்தது. ஆனால் என் அம்மாவைக் குத்தியவனிடம் மெல்லியதான கத்தி இருந்தது. நான் போட்ட சத்தத்தைக் கேட்டு என் அத்தை வீட்டுக்கு வந்தார். அதன்பிறகு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தார்கள்.
தகவலறிந்து வீட்டுக்கு வந்த அப்பா, என்னையும் அம்மாவையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார். அங்கு சிகிச்சை பலளின்றி அம்மா இறந்து விட்டார். மேற்படி நபர்களை பார்த்தால் அடையாளம் காட்டுவேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். மோனிகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து மூன்று பேரைக் கைது செய்தார். விசாரணையில் புளியந்தோப்பைச் சேர்ந்த வெள்ளை அந்தோணி அவனின் கூட்டாளி பாலாஜி, ஜெயந்தியின் வீட்டின் அருகில் வசிக்கும் செல்லப்பா எனத் தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்த போது கொலைக்கான காரணம் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “ஜெயந்தியின் மாமியார் ருக்மணி. இவர் எப்போதும் கழுத்து நிறைய தங்க நகைகளை அணிந்திருப்பார். அதை நோட்டமிட்ட செல்லப்பா, தன்னுடைய கூட்டாளிகளிடம் மூதாட்டியிடம் நகைகளை கொள்ளையடிக்கலாம் எனக் கூறியிருக்கிறார். அதன்படி சம்பவத்தன்று வெள்ளை அந்தோணியும் பாலாஜியும் அமைந்தகரைக்கு வந்தனர். செல்லப்பா, அந்தப்பகுதியில் வசிப்பதால் அவன் ருக்மணி வீட்டுக்குச் செல்லவில்லை.
ருக்மணியின் வீட்டுக்குச் செல்ல வேண்டிய கொள்ளையர்கள் தவறுதலாக அவரின் மருமகள் ஜெயந்தியின் வீட்டுக்குள் சென்றிருக்கின்றனர். அங்கு ஜெயந்தியிடமும் அவரின் மகள் மோனிகாவிடமும் நகைகளைப் பறிக்க முயற்சி செய்திருக்கின்றனர். அப்போது நடந்த சண்டையில்தான் ஜெயந்தியையும் மோனிகாவையும் கத்தியால் குத்தியிருக்கின்றனர். மோனிகா சத்தம் போட்டதால் வெள்ளை அந்தோணியும் பாலாஜியும் தப்பி ஓடிவிட்டனர்.
கடந்த 17-ம் தேதி தாம்பரம் பகுதியில் வெள்ளை அந்தோணியும் பாலாஜியும் நகைகளை திருடியிருக்கின்றனர். சிசிடிவி மூலம் அந்த வழக்கில் துப்பு துலக்கிய தாம்பரம் போலீஸார் வெள்ளை அந்தோணியிடம் விசாரித்தபோதுதான் அமைந்தகரையில் நடந்த கொலை, கொலை முயற்சி சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது” என்றனர்.
ஜெயந்தியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தபோது 41 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக போலீஸாரிடம் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அந்தளவுக்கு கொடூரமாக ஜெயந்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். கைதான வெள்ளை அந்தோணி, பாலாஜி மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. விசாரணைக்குப்பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
மாமியாருக்கு வைத்த குறியில் மருமகள் உயிரிழந்தச் சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.