மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளதாக அப்படத்தின் காஸ்டியூம் டிசைனர் ஏகா லக்கானி தெரிவித்துள்ளார்.
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கவேண்டும் என்பது மணிரத்னத்தின் பெருங்கனவு. தற்போதுதான், அந்தக் கனவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். கடந்த 2019 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் அறிவிப்பு வெளியானது. கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, விக்ரம், பேபி சாரா, த்ரிஷா உள்ளிட்ட பெரும் பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றது. ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கிறார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அனைத்து நடிகர்களையும் வைத்து பிரம்மாண்டப் பாடல்காட்சி எடுக்கப்பட்டது. இப்பாடலுக்கு நடனம் அமைத்தவர் பிருந்தா மாஸ்டர். சமீபத்தில் பாடல் காட்சியை படமாக்கிவிட்டு மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். அதேபோல, இப்படத்தின் காஸ்டியூம் டிசைனரான ஏகா லக்கானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொன்னியின் செல்வன் ஹைதராபாத் ஷெட்யூல் முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தாய்லாந்து, பாண்டிச்சேரியைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.