ழகான தாமரைத் தடாகம். மாலை வந்ததும் தாமரைப்பூக்கள் தங்கள் இதழ்களை மெள்ள மெள்ள மூட ஆரம்பிக்கின்றன. ஒரு தாமரையில் மட்டும் வண்டு ஒன்று தேன் உண்ட மயக்கத்தில் மகரந்தப்படுக்கையிலேயே உறங்கிவிட்டது. வண்டு சுவாசிக்கக் காற்று வருமளவுக்குத் தாமரை தன் இதழ்களைத் தளர்வாக மூடுகிறது. இரவெல்லாம் உறங்கிய வண்டு சூரியன் வருவதற்கு முன்னரே துயில் கலைந்து எழுந்துவிடுகிறது. ஆனால், தன் சிறகுகளை விரித்தால், தாமரையின் இதழ்கள் கிழிந்துவிடும் என்பதால், தாமரை இதழ்கள் மலரும்வரை அப்படியே படுத்துக்கொண்டிருக்கிறது. அகநூல் ஒன்றில், மேலே சொன்ன அர்த்தத்தில் பாடல் ஒன்று வரும். தாமரைகள் வண்டின் மூச்சை நிறுத்துவதில்லை; வண்டுகள் தங்கள் சிறகின் வலிமையால் மலரின் இதழ்களைக் கிழிப்பதுமில்லை. இந்த இயற்கைத் தத்துவம் தாம்பத்தியத்துக்கும் பொருந்தும். அதிலும் புதுமணத் தம்பதிகளின் புத்தம் புது தாம்பத்தியத்துக்கு நிறையவே பொருந்தும். பரஸ்பரம் இருவரும் உணர்வுகளையும் உடல்களையும் பரிமாறிக்கொள்ள ஆரம்பிக்கிற தாம்பத்தியத்தின் ஆரம்பத்தில், ஆயிரத்தெட்டு சந்தேகங்களும் கேள்விகளும் தம்பதியின் மனங்களில் ஓடிக்கொண்டே இருக்கும். அவற்றுக்கெல்லாம், இந்தக் கட்டுரை வழியே தீர்வு சொல்கிறார் பாலியல் நிபுணர் நாராயண ரெட்டி.

முதல் உறவிலேயே ஒரு முழுமையான தாம்பத்தியம் கிடைக்குமா?

நிச்சயம் கிடைக்காது. அது காதல் திருமணம் என்றாலும் சரி, பெற்றோர் செய்துவைத்த திருமணம் என்றாலும் சரி… முதலிரவின் முதல் உறவிலேயே ஒரு முழுமையான செக்ஸ் கிடைக்கவே கிடைக்காது. நியாயமாக யோசித்துப் பாருங்களேன். ஆணோ, பெண்ணோ அதுவரை மானம், நாகரிகம், கூச்சம் என்று மறைத்துவைத்த உடலை எப்படி முதல் உறவிலேயே முழுமையாகப் பகிர்ந்துகொள்ள முடியும்? அதனால்தான் காமசூத்திரம்கூட, முதல் இரவிலேயே தம்பதி உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்கிறது. திருமணமான முதல் மூன்று நாள்கள் தம்பதி தனித்தனியாகப் படுக்க வேண்டும். அதன் பிறகு ஏழு நாள்கள் வரை இருவரும் நிறையப் பேச வேண்டும். முதலில் பொதுவான விஷயங்கள், பிறகு இருவரைப் பற்றிய பகிர்தல்கள் என்று பேசிப்பேசியே மனங்கள் ஒன்று கலக்க வேண்டும். பிறகு சின்னச் சின்ன ஸ்பரிசங்கள், அணைப்பு… அவை மனதை கிளர்ச்சியுறச் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் பிறகுதான், உடல்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அந்தத் தாம்பத்தியம் நிறைவாக இருக்கும்.

முதல் உறவு வலி நிரம்பியதாக இருக்கும் என்கிற எண்ணம் பெண்கள் மனதில் இருக்கிறதே..?

பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும்கூட வலி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எப்போது தெரியுமா? மனங்கள் இணையாத தாம்பத்தியத்தில், உறவின்போது பெண் தன் உடலைச் சுருக்கிக்கொள்ளவே செய்வாள். உடல் சுருங்கும்போது பெண்ணுறுப்பும் சேர்ந்தே சுருங்கும். உறவின்போது வலி எடுக்காமல் இருக்க, இயற்கையிலேயே பெண்ணுறுப்பில் திரவம் ஒன்று கசியும். பெண்ணின் மனம் தன் கணவனின் மீதுள்ள காதலால் தாமரை மலர்போல மலரும்போது, அந்தத் திரவம் தானாகவே சுரக்கும். அது சுரந்தால், உராய்வினால் இருவருக்கும் வலி ஏற்படாது. அதற்காகத்தான் உடல்களுக்கு முன்னால் மனங்கள் சங்கமிக்க வேண்டும் என்று சொன்னேன்.

முதல் உறவை நினைத்து ஆண்கள் சிலர் பதற்றமடைகிறார்களே… ஏன்?

அது இயல்பான விஷயம்தானே? முதல் முறை தன்னை ஒரு பெண்ணுடன் பகிர்ந்து கொள்ளும்போது, ஆணுக்கும் பதற்றம் வருவது இயல்புதான். இது தவிர, கல்யாண மாப்பிள்ளையிடம், ‘மனைவியுடன் முதல் இரவிலேயே உறவுகொண்டால்தான் நீ சரியான ஆண். இல்லையென்றால், உன் மனைவி உன்னை மதிக்கமாட்டாள்’ என்று, அவன் நண்பர்கள் தவறாக வழிநடத்துவதுகூட இந்தப் பதற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம். அந்த நண்பர்களும், ஏதேனும் போர்ன் சைட்களை பார்த்துவிட்டுதான் இந்த அறிவுரைகளை அள்ளிவிடுவார்கள். இது, ஒரு குருடன் இன்னொரு குருடனுக்கு வழிகாட்டுவதுபோலத்தான். ஆணோ, பெண்ணோ போர்ன் சைட் மற்றும் நண்பர்களின் அனுபவங்களை முழுக்க முழுக்க ஃபாலோ செய்யாமல், தங்கள் இருவரின் உடல் மற்றும் மனநிலை என்ன சொல்கிறதோ, அதை மட்டும் செய்ய வேண்டும்.

நிச்சயம் தேனிலவு செல்ல வேண்டுமா?

`ஆம்’ என்பதுதான் என் கருத்து. புதுமணத் தம்பதிகளுக்குத் தனிமை நிச்சயமாகத் தேவை. அந்தத் தனிமை ஓய்வுடன் கூடியதாக இருக்க வேண்டும். இன்று `ஹனிமூன் பேக்கேஜ்’ என்று டூர் புக் பண்ணித் தருகிறார்கள். பகல் முழுவதும் டூரிஸ்ட் ஸ்பாட்களில் சுற்றிக்கொண்டிருக்கிற தம்பதிக்கு ரூமுக்கு வந்தவுடன் காதலா வரும்? தூக்கம்தான் வரும். மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தால், மணமகனுக்கு அது புது இடம். அதனால் அவர் பதற்றமாக இருப்பார். அடுத்து மணமகன் வீடு. இந்த இடம் பெண்ணுக்குப் புதிது. அதனால், அவர் பதற்றமாக இருப்பார். தேனிலவுதான் தம்பதிகளுக்குக் கிடைக்கிற முதல் தனிமை. அந்தக் காலங்களில் குழந்தையில்லாத தம்பதியரை ஆன்மிக யாத்திரை செல்லுங்கள் என்று பெற்றோர்கள் அனுப்பிவைத்ததன் காரணம், தம்பதியருக்குத் தனிமை தருவதற்காகத்தான்!

ஹனிமூன் நேரத்தில் காய்ச்சல் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் தொற்று ஏன் ஏற்படுகிறது?

திருமணத்துக்கு முன்னரே, ஆண்கள் தினமும் குளிக்கும்போது தன்னுடைய உறுப்பின் நுனித் தோலைப் பின்னுக்குத் தள்ளி, சுத்தப்படுத்த வேண்டும். ஆணுறுப்பு சுத்தமாக இல்லையென்றால், மனைவிக்குத் தேனிலவு நேரத்தில் தொற்று ஏற்படும். உறவின்போது நீர் சுரக்கவில்லையென்றால், அந்த உராய்வும் சேர்ந்துகொண்டு வலியை ஏற்படுத்தும். பிரச்னை அதிகமாகும்போது, பெண்ணுக்குக் காய்ச்சலும் வரும். மருத்துவர் ஆலோசனை பெற்று ஆன்டிபயாடிக் மருந்து எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும்.

புத்தம்புது தாம்பத்தியத்தில் கணவனும் மனைவியும் தங்கள் விருப்பங்களை, நாசுக்காகத் தங்கள் துணைக்கு எப்படித் தெரியப்படுத்துவது?

நாசுக்காகக்கூடத் தெரியப்படுத்த முடியாது என்பதுதான் யதார்த்தம். வெளிப்படுத்துகிற அளவுக்கு அந்நியோன்யம் வந்தபிறகு அவற்றைப் பார்த்துக்கொள்ளலாம். அதுவரை துணையின் முக உணர்வுகளைப் பார்த்துதான் விருப்பங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எல்லாவற்றுக்கும் கூகுளில் ரெஃபரன்ஸ் தேடுகிற காலம் இது. இதற்கு முதல் உறவும் தப்பவில்லை. அது ஆரோக்கியமான செயலா?

இல்லை. மனதுக்குள் வேண்டாத கற்பனைகளைத்தான் இது வளர்க்கும். அவை நடக்காதபோது தம்பதிக்குள் ஏமாற்றங்கள் வரும். இதைத் தொடர்ந்து விரிசல்களும் வரலாம்.

தாம்பத்தியம் மனம் சார்ந்த விஷயமா, உடல் சார்ந்த விஷயமா?

பக்கத்தில் இருக்கிற வாழ்க்கைத் துணையைக் கொஞ்ச வேண்டும், கொண்டாட வேண்டும், உறவுகொள்ள வேண்டும் என்று தூண்டுவது மனம்தான். மனதின் ஆசை உடல் வழியாக நிறைவேறுகிறது. ஒரு நல்ல தாம்பத்தியத்துக்கு உடல், மனம் இரண்டுமே முக்கியம்.

ஆ.சாந்தி கணேஷ்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.