சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 22 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இழப்பீடு தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 22 பேரை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தையின் மீது கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
13 வயது சிறுமியை கட்டயாப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடி மருத்துவ உதவி, உளவியல் ஆலோசனை, பிற சட்ட உதவி மற்றும் கொடூரமான குற்றங்களால் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் களங்கத்திலிருந்து விடுபடுவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பதற்கு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு அந்த குற்றம் தொடர்பான அறிவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதோடு சாட்சிகளிடம் வாக்குமூலத்தையும் போலீசார் பெற்றுள்ளனர்.
இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். வழக்கு விசாரணை இன்னும் 2 தினங்களில் நீதிமன்றத்தில் வர உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சீர்திருத்த மற்றும் மறுவாழ்விற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஆதரவாக ஒரு நபர் நியமிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது. சிறப்பு நீதிமன்றம் இடைக்கால இழப்பீட்டு உதவித்தொகையான ரூ.1.5 லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்திற்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.