வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு, வேளாண் அமைச்சருக்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தால் போதும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, “வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஜனவரி 22-ஆம் தேதி அரசு கொண்டிருந்த நிலைப்பாடுதான் நீடிக்கிறது” என்றார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரை நிகழ்த்தினார்.
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்திய பிரதமர், அவரது கனவுகளை நனவாக்க நாம் பாடுபடவேண்டும் என்று கூறினார். அமெரிக்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை இன்று காலை அவமதிக்கப்பட்ட நிகழ்விற்குக் கண்டனம் தெரிவித்த அவர், இதுபோன்ற வெறுப்பு மிகுந்த சூழல் நமது கிரகத்தில் வரவேற்புக்குரியது அல்ல என்று தெரிவித்தார்.
வேளாண் சட்டங்கள் குறித்த பிரச்னையை அரசு திறந்த மனதுடன் அணுகுவதாக உறுதிய அளித்த பிரதமர் மோடி, “கடந்த ஜனவரி 22-ஆம் தேதி அரசு கொண்டிருந்த நிலைப்பாடுதான் தற்போதும் நீடிக்கிறது. வேளாண் அமைச்சர் வழங்கிய திட்ட முன்மொழிவு தற்போதும் நீடிக்கிறது. பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு, வேளாண் அமைச்சருக்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தால் போதும். கடந்த ஜனவரி 26-ஆம் தேதி நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசிய தலைவர்களுக்கு, சட்டம் தனது கடமையை செய்யும்.
நாடாளுமன்றக் கூட்டம் குறித்து அவர் பேசும்போது, “தலைவர்கள் எழுப்பும் பிரச்னைகள் குறித்து, விரிவான விவாதத்திற்கு அரசு தயாராக இருக்கிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற வேண்டியது அவசியம். அடிக்கடி ஏற்படும் இடையூறுகளால் சிறிய கட்சிகள் தங்களது கருத்துக்களை போதுமான அளவு வெளிப்படுத்த முடியாமல் சிரமத்திற்கு உள்ளாவார்கள். இடையூறுகள் இல்லாமல், நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறுவதை பெரிய கட்சிகள் உறுதி செய்யவேண்டும். அதன் வாயிலாக சிறிய கட்சிகள் தங்களது கருத்துக்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்க ஏதுவாக இருக்கும்” என்றார் பிரதமர் மோடி.