முதல்வர் வரவேற்பிற்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு, பணம் மற்றும் பிரியாணி பொட்டலம் முறையாக வழங்கவில்லை என அழைத்து வரப்பட்டவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மணிமண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைப்பதற்காக வருகை தந்தனர்.
இதனையொட்டி மதுரைவந்த முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு கப்பலூர் சுங்கச்சாவடி பகுதியில் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஏற்பாட்டில் ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் காத்திருந்து வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சிக்காக கப்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் பிரியாணி அடங்கிய உணவு பொட்டலம் மற்றும் பணம் ஆகியவற்றை கவர்களில் அப்பகுதியிலேயே வழங்கினர். இதில் அழைத்துவரப்பட்ட பலருக்கு பணம் வழங்கப்படாததால் அப்பகுதியில் நிர்வாகிகளுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.