டெல்லியிலுள்ள கரியப்பா மைதானத்தில் இன்று தேசிய மாணவர் படையினர் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவருடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் முப்படைத் தளபதிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்த கொரோனா பேரிடர் காலத்தில், லட்சக்கணக்கான என்.சி.சி மாணவர்கள் நாட்டு மக்களுக்கும், இந்த சமூகத்துக்கும் ஆற்றிய பணி மிகவும் பாராட்டத்தக்கது” என்றார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர், “நாட்டிலுள்ள 173 எல்லைப் பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் தேசிய மாணவர் படை திட்டம் விரிவுபடுத்தப்படும். அதோடு, அங்குள்ள ஒரு லட்சம் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டும். அதில் மூன்றில் ஒரு பகுதியினராகப் பெண்கள் இடம்பெறுவார்கள்” என்று கூறினார்.
இந்த திட்டத்துக்கு ராணுவ அமைச்சகம் சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது. நாட்டின் கிராமங்களிலுள்ள 1,000 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. மேலும், மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்காக 83 தேசிய மாணவர்கள் படைப் பிரிவுகள் மேம்படுத்தப்படும் என்றும், இதில் ராணுவம் சார்பில் 53, கடற்படை சார்பில் 20 மற்றும் விமானப்படை சார்பில் 10 பிரிவுகளும் மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த விரிவுபடுத்தும் திட்டம் மாநில அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தில் ஒரு லட்சம் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. இந்தநிலையில், அந்த ஒரு லட்சம் என்.சி.சி படையினரும் 175 மாவட்டங்களிலுள்ள கடலோர மற்றும் எல்லைப் பகுதிகளில் பணியாற்றுவார்கள் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.