வளர்ப்பு தந்தையால் மிரட்டப்பட்டு, சிறார் வதைக்கு உள்ளாக்கப்பட்டு கருவுற்ற 13 சிறுமிக்கு, ஹெச்.ஐ.வி பாதிப்பும் ஏற்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்திருக்கிறது.
சிறுமியை வதை செய்து, சிறுமியின் தாய்க்கும் ஹெச்.ஐ.வி தொற்று ஏற்படக் காரணமான வளர்ப்பு தந்தை போக்சோவில் கைதுசெய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி, சில ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவுக்கு வேலைக்குச் சென்றபோது, அங்கு கணவர் ஆதரவில்லாமல் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர், சில வருடங்களுக்கு முன்பு கல்லுப்பட்டி பகுதிக்கு வந்து வசிக்க ஆரம்பித்தனர். சமீபத்தில் அந்தப் பெண்ணின் 13 வயது மகளுக்கு உடல்நலமில்லாமல் போயிருக்கிறது. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது சிறுமி கருவுற்ற விஷயம் தெரிந்து, மருத்துவர்களும் தாயும் அதிர்ச்சி அடைந்தனர்.
தனக்கு நேர்ந்ததைச் சொல்ல பயந்த சிறுமியிடம் ஆறுதல் கூறி மெல்ல மெல்ல விசாரித்தபோதுதான், தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் வளர்ப்பு தந்தை ராமமூர்த்தி சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வதை செய்தது தெரியவந்தது.
இந்தக் கொடுமை குறித்து சிறுமியின் தாய் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமியை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தாய், வளர்ப்பு தந்தை மற்றும் சிறுமியின் ரத்த மாதிரியை அங்கு சோதனை செய்தனர்.
அப்போது மற்றொரு பேரதிர்ச்சியாக ராமமூர்த்தி, சிறுமியின் தாய், சிறுமி ஆகியோருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
வளர்ப்பு தந்தையின் முறை தவறிய நடத்தையாலும், வன்முறையாலும் ஒன்றும் அறியாத 13 வயது சிறுமி கருவுற்றும், ஹெச்.ஐ.வி பாதிப்புக்கும் ஆளாகியுள்ளார்.
தற்போது அவர் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கும் தாய்க்கும் மனநல ஆலோசனையும், உயர் தர மருத்துவச் சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளன. இந்தச் சம்பவம் மதுரை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.