தமிழகத்தின் தேனி மாவட்டத்தையும், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தையும் இணைக்கும் பாரம்பர்ய மலைப்பாதைகள் பல இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் சாக்கலூத்துமெட்டுப் பாதை. சுமார் 4 கிலோமீட்டர் தூரம்கொண்ட மலைப்பாதையில் சாலை அமைப்பதன் மூலம், தேனியின் தேவாரம் பகுதியையும், கேரளாவின் உடும்பஞ்சோலைப் பகுதியையும் இணைக்க முடியும். இதனால், தற்போது போடிமெட்டு வழியாக சுமார் 60 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
சாக்கலூத்து மெட்டு மலைப்பாதையில் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக, தேவாரம் பகுதி மக்களும் விவசாயிகளும் போராடிவரும் சூழலில், அனுமதி கொடுக்க மறுக்கிறது வனத்துறை. அரசியல் கட்சிகளும் தங்களது வாக்குறுதிகளில் சாக்கலூத்து மெட்டை மறக்காமல் இடம்பெறச் செய்கின்றனர். ஆனால், இன்றுவரை அந்தத் திட்டம் கனவாகவே இருக்கிறது.
Also Read: “39 வருஷமாச்சு!” – “சாக்கலூத்துமெட்டு சாலை இருந்திருந்தா… சாவு வந்திருக்காது!”
இந்தநிலையில், சாக்கலூத்து மெட்டு மலைப்பாதையில் சுமார் 3.5 கிலோமீட்டர் தூரம், கேரளாவின் தனியார் எஸ்டேட் நிர்வாகம் சாலை அமைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும் அடக்கம் எனவும், இதற்கு மாவட்ட வனத்துறையும் உடந்தை எனவும், ஐந்து மாவட்ட பெரியாறு வைகைப் பாசன விவசாயிகள் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.
இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.தேவர் கூறும்போது, “சாக்கலூத்து மெட்டு சாலை அமைக்க பல ஆண்டுகளாக மக்கள் போராடிக்கொண்டிருக்கும் சூழலில், மாவட்ட வனத்துறை அதிகாரி, தனியார் எஸ்டேட் நிர்வாகத்துக்கு மட்டும் முறைகேடாக சாலை அமைக்க அனுமதி கொடுத்திருக்கிறார்.
Also Read: தொடர் மழை… பூஞ்சை தாக்குதலுக்கு ஆளான பயிர்கள்… கண்ணீரில் தேனி விவசாயிகள்!
இதில், 40% பட்டா நிலத்திலும், 60% காப்புக்காட்டு பகுதியிலும் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், பழைமையான மரங்கள் வெட்டப்பட்டு, பாறைகளுக்கு வெடிவைத்து தகர்க்கப்பட்டுள்ளன. அங்கே சொகுசு விடுதி கட்டவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தை நாங்கள் விடப்போவதில்லை. மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தவிருக்கிறோம்” என்றார்.
Also Read: தேனி: 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறப்பு… மகிழ்ச்சியில் உசிலம்பட்டி மக்கள்!
விவசாய சங்கத்தின் குற்றச்சாட்டு குறித்து தேனி மாவட்ட வன அலுவலர் கெளதம் கூறும்போது,“வனப்பகுதியில் எந்தச் சாலையும் இல்லை. அதில் எந்தக் கட்டுமானப் பணிகளும் நடக்கவில்லை. அங்கே சில இடங்களில் பட்டா நிலங்கள் உள்ளன. அவற்றிலும், எந்த மரங்களும் வெட்டப்படவில்லை. பட்டா நிலம், வன நிலம் தொடர்பாக உத்தமபாளையம் தாசில்தார் மூலம் சர்வே எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம். எங்கள் அதிகாரிகள் அந்தப் பகுதியில் கண்காணிப்பில் இருக்கிறார்கள். சர்வே செய்யும்போது தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.