அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் வழங்கும் ‘ராக்கி’ படத்தின் மூன்றாவது டீசர் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதை வென்ற ‘ஆரண்ய காண்டம்’. அப்படத்தில் உதவி இயக்குநராகவும், ‘இறுதிச்சுற்று’ படத்தில் டயலாக் போர்ஷனை எழுதிய இயக்குநருமான அருண் மாதேஸ்வரன் தற்போது, செல்வராகவனையும் கீர்த்தி சுரேஷையும் வைத்து ‘சாணிக் காயிதம்’ படத்தை இயக்கி வருகிறார்.
இவர் முதலாவதாக இயக்கிய ‘ராக்கி’ என்ற படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதன், வித்தியாசமான ட்ரைலரும் டீசரும் வெளியாகி பாராட்டுக்களை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ‘தரமணி’ நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஏற்கனவே, தங்களது ரெளடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா நடித்துவரும் ‘நெற்றிக்கண்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்து வரும் நிலையில், ராக்கி படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றினார்கள். இந்நிலையில், சமீபத்தில், வெளியான ராக்கி டீசரில் குடலை உருவி மாலை போடும் காட்சிகள் வன்முறையாக உள்ளதாக பலர் கருத்து தெரிவித்திருத்தார்கள்.இந்நிலையில், மூன்றாம் டீசரை இன்று அனிருத் வெளியிட்டுள்ளார்.
அந்த டீசரில், ‘இங்கருந்து 20 மைல் தூரம்தான் நான் பிறந்து வளர்ந்த இடம். ஆனா, இப்போ என்னால அங்கப் போக முடியலை’ என்று ரோகிணி தனுஷ்கோடி கடலில் நின்று உருக்கமுடன் பேசுகிறார். வசந்த் ரவி ஒரு வீட்டை ஏக்கத்துடன் தேடிச் செல்கிறார். உள்ளே இருக்கும் பெண் யார் என்று கேட்பதோடு ரோகிணி தனது மகள் மகனுடன் படகுகள் பின்னணியில் கடல் அருகில் நின்று கருப்பு வெள்ளை கால சூழலில் போட்டோ எடுத்துக்கொள்ளும் காட்சிகளுடன் டீசர் முடிவடைகிறது.
பிறந்த மண்ணைவிட்டு அகதிகளாக தஞ்சமடையும் ஈழத்தமிழரின் குடும்பங்களின் வலியை உணர்த்துவதாக உள்ள இந்த டீசரை வைத்தே ராக்கி ஈழத்தமிழரின் துயரசாட்சி என்பது தெளிவாகிறது.பலரும் இந்த டீசரைப் பகிர்ந்து பாராட்டி வருகிறார்கள்.