வருகிற 26-ம் தேதி டெல்லியில் குடியரசு தின விழா நிகழ்வில் பழங்குடியினர் சார்பாக நீலகிரியைச் சேர்ந்த கயமதாஸ்-புஷ்பஜா தம்பதி பங்கேற்கின்றனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகிலுள்ள அத்திச்சால் எனும் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கயமதாஸ் (39), புஷ்பஜா(27) தம்பதி. பனியர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்கள் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர்.
கூலி வேலை செய்துவரும் கயமதாஸ், அஞ்சல் வழியாக இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்று வருகிறார். இந்நிலையில் வருகிற 26-ம் தேதி டெல்லியில் குடியரசு தின விழா நிகழ்வில் பழங்குடியின மக்கள் சார்பாகப் பங்கேற்க, இந்தத் தம்பதி தேர்வாகியுள்ளனர். பந்தலூரில் இருந்து சென்னை செல்லும் இவர்கள், அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்லவிருக்கின்றனர்.
இதுகுறித்துப் பேசிய கயமதாஸ், “சில முறை டிரெயின்ல போயிருக்கோம். ஆனா, முதல்முறையா ஏரோபிளேன்ல இப்போதான் போகப் போறோம். குடியரசு தின விழா நிகழ்ச்சியில கலந்துக்கவும் ஜனாதிபதிய சந்திக்கவும் ஏற்பாடு செஞ்சிருக்கிறதா சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த அழைப்பு, எங்க சமுதாயத்துக்கு சந்தோஷமும் பெருமையும் தந்திருக்கு” என்றார்.