தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதித்துள்ள நிலையில், நடிகர் சிம்பு முதல்வருக்கு நன்றி கூறியுள்ளார்.
கொரோனா தொற்று பேரச்சத்தின் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், தியேட்டர்கள் மூடப்பட்டன. திரைத்துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், ’மாஸ்டர்’ படம் பொங்கலுக்கு வெளியாவதையொட்டி நடிகர் விஜய் முதல்வரை சந்தித்து 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கும்படி கோரிக்கை வைத்தார்.
அதேபோல, மாஸ்டருடன் பொங்கலுக்கு வெளியாகும் ஈஸ்வரன் படத்தின் சார்பாக நடிகர் சிம்புவும் முதல்வருக்கு கோரிக்கை வைத்து இன்று காலையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். தொடர்ச்சியாக திரைத்துறையினர் வைத்த கோரிக்கையால் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு நன்றி தெரிவித்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ”எங்களது கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த, தமிழ் திரையுலகிற்கு நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கு நன்றி” என்று உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார்.