தனிநபர் விபத்து காப்பீட்டு பாலிசியை எப்படி தேர்வு செய்யலாம் என்பது குறித்து விளக்குகிறார் காப்பீட்டு ஆலோசகரான சங்கர் நீதிமாணிக்கம்.
“ஆயுள் காப்பீட்டில் இருந்து மாறுபட்டது தனிநபர் விபத்துக் காப்பீடு. ஆயுள் காப்பீடு என்பது மரணம் ஏற்பட்டால் தரப்படும் இழப்பு. தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்தினால் நிகழும் மரணம், நிரந்தர ஊனம், பகுதி ஊனம், ஊதிய இழப்பு போன்றவற்றிக்கு ஈடு செய்யக் கூடியது. இதை ஆயுள் காப்பீடு எடுக்கும்போது கூடுதல் ரைடர் ஆகவும் எடுக்கலாம். அப்படி எடுக்கும்போது விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இருமடங்காக காப்பீடு தொகை வழங்கப்படும்.
இப்போது இருக்கும் சூழலில் தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது வண்டிகளுக்கு காப்பீடு எடுக்கும்போது கண்டிப்பாக இணைத்துக் கொடுக்கப்படுகிறது. இந்த காப்பீட்டின்படி (PA-Personal Accident) உறுதித்தொகையானது (Sum Assured) ரூ.15 லட்சம் ஆகும்.
பல நிறுவனங்கள் தனிநபர் விபத்துக் காப்பீட்டை குழுக்காப்பீடு முறையில் மிகக் குறைந்த பிரிமியத் தொகையில் வழங்குகிறது. இந்த அடிப்படையிலேயே பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) காப்பீடு வங்கிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.12/- என்ற குறைந்த பிரிமியம் மூலம் 2 லட்சம் இழப்புத் தொகை வழங்குகிறது. இதை தனி நபர்கள் தங்கள் வங்கிக் கணக்கு மூலம் எடுக்கலாம். ஆண்டுக்கு ஒருமுறை இந்த காப்பீட்டின் பிரீமியம் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்படும்.
இதே அடிப்படையில் பல நிறுவனங்கள் தங்களின் சேவைகளை விற்பனை செய்ய காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து குழுக்காப்பீடு முறையில் விபத்துக் காப்பீடு திட்டங்களை விற்பனை செய்கின்றன. இந்தத் திட்டங்களில் ஒரு தனிநபரின் வருமானம் மற்றும் தேவைக்கு ஏற்ப காப்பீட்டுத் தொகையை தெரிவு செய்து காப்பீடு எடுக்கலாம். எல்லா நிறுவனங்களின் காப்பீடுக் காலமும் ஓர் ஆண்டு ஆகும்.
பெரும்பாலும் எல்லா நிறுவனங்களும் ஒரே விதிமுறைகளையே இந்தக் காப்பீட்டுக்கு பின்பற்றுகிறது. எனவே, தனிநபர்கள் நிறுவனங்களின் பிரீமியம் தொகையை ஒப்பிட்டு தேவையான நிறுவனத்தில் இந்த தனிநபர் விபத்துக் காப்பீடு எடுக்கலாம்.
தற்போது விபத்துக் காப்பீடுகள் வழங்குவதின் நடைமுறைகளை இன்னும் எளிமையாக்க தகுந்த மாற்றங்களை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் கொண்டுவர காப்பீடு நிறுவனங்களுக்கு IRDA பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் விபத்துக் காப்பீடு எடுக்கும் நடைமுறை இன்னும் எளிதாகும்.’’