“எம்.ஜி.ஆர். பேரை சொல்லி அதிமுக ஓட்டுகளை கலைக்க முடியாது” என்று கமலுக்குப் பதிலளிக்கும் வகையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கமல் முதலில் தனியாக நிற்பேன் என்றார். தற்போது ஆள்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். எம்.ஜி.ஆர் மீது உண்மையில் கமலுக்கு பக்தி இருக்குமேயானால் அவரை புரட்சித் தலைவர் என்றுதான் அழைத்திருக்க வேண்டும். இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட கைகள் வேறு யாருக்கும் போடாது. எம்.ஜி.ஆர். பேரை சொல்லி அதிமுக ஓட்டுகளை கலைக்க முடியாது. எம்.ஜி.ஆர் 10 கோடி தமிழர்களுக்கும் சொந்தம்” என்றார்.
‘எம்.ஜி.ஆர் படத்தை போஸ்டரில் சிறியதாக்கியவர்கள் என்னை எதிர்க்கிறார்கள்’ என்ற கமல் கருத்துக்கு பதில் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், “எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தியது அதிமுக. கமல் மூன்றாவது அணியல்ல; நான்காவது அணி அமைத்தாலும் அது பிணியாகத்தான் போகும்” என பதிலளித்தார்.
மேலும், “பச்சோந்தியை போல் செல்லுமிடமெல்லாம் நிறத்தை மாற்றிக்கொள்ளும் மனிதர்களாக திமுகவினர் உள்ளனர்” என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.