1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான புத்தகப்பையின் சுமை, அவர்களது எடையில் 10% மட்டுமே இருக்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையை மையமாகக் கொண்டு, மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி பை கொள்கையை வகுத்துள்ளது. அதன்படி, புத்தகப்பையின் எடையை சீராக கண்காணிக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு புத்தகத்தின் எடையையும் அதன் மீது குறிப்பிடப்பட வேண்டும் எனவும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
பள்ளிப் பைகளின் அதிகபட்ச எடை மாணவரின் எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் லாக்கர்கள், பையின் எடையை சரிபார்க்க டிஜிட்டல் எடை இயந்திரம் இருக்க வேண்டும் என்றும் மாணவர்கள் சக்கர கேரியர் அல்லது டிராலி பேக் கொண்டு வருவதை நிறுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது எனவும், பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கட்டாய வசதிகள், மதிய உணவு போன்றவை போன்றவை போதுமானதாகவும், நல்ல தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; இதனால் குழந்தைகள் மதிய உணவு பாக்ஸ் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல மாட்டார்கள் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிப் பையில் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வதைத் தவிர்ப்பதற்காக அல்லது அதன் அளவைக் குறைப்பதற்காக பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் எளிதாக அணுகக்கூடிய அளவில் நல்ல தரமான குடிநீரை வழங்குவது பள்ளி நிர்வாகத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்று பள்ளி புத்தகப்பை கொள்கை கூறுகிறது.