கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ்மொழி கற்பிக்கப்படும் என திருத்தம் செய்யக் கோரிய வழக்கில் பிரஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளை கற்கலாம்; ஆனால், தமிழ்நாட்டில் தமிழ்மொழியை கற்க கூடாதா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதுரையை சேர்ந்த பொன்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுதாக்கல் செய்திருந்தார். அதில், “கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. அதில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை நடத்தப்படுகிறது. 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு தமிழ்மொழி கற்றுக் கொடுப்பதில்லை. தமிழ்மொழி என்பது முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கல்வியாண்டு தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது. எனவே கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் தமிழ்மொழியை கட்டாய கல்வி மொழியாக ஆக்கவேண்டும். 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு முதல் மொழியாக தமிழ்மொழியை கற்றுக்கொடுக்க குறிப்பிட்ட காலத்திற்குள் வரையறை செய்ய வேண்டும். மேலும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு கல்வி சட்டத்தின்படி 1 முதல் 10 வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப்பாடம் என்று உள்ளது என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், மத்திய அரசு வழக்கறிஞர் கூறும்போது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டது. இங்கு படிக்கும் மாணவர்கள் 50% வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். மேலும் விருப்பப்படாமாக தமிழ் கற்பிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

image

அப்போது நீதிபதிகள், பிரஞ்சு, ஜெர்மன், பெங்காலி உள்ளிட்ட மொழிகளை கற்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் தமிழ்மொழியை கற்கக்கூடாதா என கேள்வி எழுப்பினர். மேலும் இதுபோன்ற பதிலை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். பிரதமர் தாய்மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என கூறுகிறார். ஆனால், இந்தி, ஆங்கிலத்தை மட்டுமே படிக்கவேண்டும் என கட்டாயபடுத்துகின்றனர். இப்படியே சென்றால் வரும்காலங்களில் தமிழ்மொழி தெரிந்திருந்தால் கேந்திரிய வித்யாலாயாவில் இடம் கிடைக்காது என்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

தாய்மொழியில் கல்வி கற்கும் ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளனர். ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும். அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். எனவே கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப் பாடமாக தமிழ் உள்ளது என்பதை ஏற்க முடியாது. தமிழ்மொழியை மட்டும் நாங்கள் கேட்கவில்லை. அனைத்து மாநில மொழிகளுக்கும் சேர்த்து தான் கேட்கிறோம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் விரிவான உத்தரவிற்காக வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.