கால்பந்து ஜாம்பவான் மரடோனா தனது 60-வது பிறந்தநாள் கொண்டாடிய 25 நாள்களில் மரணமடைந்தது தொடர்பான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. கால்பந்து உலகின் மிகப்பெரும் ஆளுமை டியாகோ மரடோனா தனது 60 வயதில் மரணம் அடைந்தார். இவரின் மறைவு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல தலைமுறைகளை கால்பந்தின் வாசம் அறிய வைத்தவர் மரடோனா. இவர் அளவுக்கு துல்லியமாகவும் லாவகமாகவும் கோல் அடிக்கும் திறனை எந்த வீரரும் இதுவரை பெற்றிருக்கவில்லை என்றால் மிகையாகாது. இந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரரான மரடோனா விளையாட்டு உலகில் கொடிகட்டி பறந்த சமயத்தில் போதைக்கு அடிமையானார். 1994 உலகக் கோப்பையில் அமெரிக்காவில் நடந்தபோது போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதுதான் அவருக்கு கடைசி உலகக் கோப்பை தொடர். ஆம், இந்தக் காலகட்டத்தில் கொக்கெய்ன் போன்ற போதைப்பொருளுக்கு அடிமையாகி இருந்தார். இந்தப் போதைப்பொருள் பழக்கம், அவரின் வாழ்க்கையின் கடைசி வரை வந்தது.
மரடோனாவுக்கு என்ன நடந்தது?!
கடந்த அக்டாபர் 30ம் தேதிதான் தனது 60-வது பிறந்தநாளை நண்பர்களுடன் உற்சாகமாகக் கொண்டாடி இருக்கிறார் மரடோனா. அதன்பின் ஓரிரு நாள்களில் ஒருவித உடல் சோர்வுடன் இருக்கவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அர்ஜென்டினாவின் லா பிளாட்டா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், “கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை. உடல் அளவில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், மனதளவில் பாதிப்பு அடைந்துள்ளார். அதிக அளவில் மதுபானம் உட்கொண்டது மரடோனாவின் உடல்நிலையில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மருத்துவமனையில் 3 முதல் 5 நாட்கள் வரை தங்கியிருந்து சிகிச்சை பெற்று கொள்வார்” என்று அறிவித்தனர்.
இது மருத்துவர்கள் சொன்ன முதல்கட்ட தகவல்தான். இதையடுத்து அடுத்தடுத்து மருத்துவ சோதனைகளை நடத்தி வந்தனர். இந்தச் சோதனையில் மரடோனாவுக்கு மூளையில் நாள்பட்ட ரத்தகட்டி ஏற்பட்டு இருப்பது தெரியவரவே, உடனடியாக அறுவைசிகிச்சை செய்தனர் மருத்துவர்கள். அறுவை சிகிச்சையால் ஓரளவு உடல்நிலை தேறிவர மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். எனினும், அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்தவண்ணம் இருந்தார்.
இந்நிலையில்தான் நேற்று காலை திடீர் நெஞ்சு வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அதில் பயன் இல்லை. கடைசி வரை அவரது மூச்சை மீட்டெடுக்க முடியவில்லை. கடைசி காலகட்டத்தில் மரடோனா குடிக்கு அடிமையாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் 60-வது பிறந்தநாள் கொண்டாடிய 25 நாளில் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.