நாகப்பட்டினம் மாவட்டத்தில் 61ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நாகை மாவட்ட முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு நடப்பு ஆண்டு குறுவை சாகுபடி இலக்கை மிஞ்சியது. ஆனால் அறுவடை நேரத்தில் திடீரென்று பெய்த மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் விவசாயிகள் குறுவை நெல் அறுவடை செய்து , கொள்முதல் நிலையங்களில் விற்று வருகின்றனர். நாகை மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று, இந்தாண்டு கூடுதலான நிலையங்களுடன் 174 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் வீதம் குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கீழையூர், வலிவலம், அருந்தவம்புலம், சாட்டியக்குடி உள்ளிட்ட நேரடி கொள்முதல் நிலையங்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் சாக்குகள் இருப்பு மற்றும் நெல் கொள்முதல் தரத்தை ஆய்வு செய்தார்.
அவரிடம் பேசியபோது, “பருவமழை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால் விவசாயிகளிடமிருந்து உடனுக்குடன் நெல்லைக் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 1 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 61ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 13 ஆயிரத்து 477 விவசாயிகள் வங்கிக் கணக்குகளில் ரூ.12 கோடியே 54 லட்சத்து 55 ஆயிரத்து 920 வரவு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் 32 ஆயிரத்து 625 மெட்ரிக் டன் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள நெல் மூட்டைகள் குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் புது ரக நெல் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயம் செய்த இலக்கில் எஞ்சியுள்ள நெல் சில தினங்களில் கொள்முதல் செய்யப்படும். ஒரு லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்வதற்கு தேவையான சாக்குகள் மற்றும் சணல் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன” என்றார்.