2017-ம் ஆண்டு முதல் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு நடந்து வருகிறது. இதில் மாநில வழி பாடத்திட்டத்தில் பயின்ற தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சிப் பெற முடியவில்லை என்ற கருத்துகள் பரவலாக எழுந்துள்ளன. நீட் தேர்வில் பயிற்சி மையங்களில் பல லட்சங்கள் செலவு செய்து ஒராண்டு பயிற்சிப் பெற்றவர்களே பெரும்பாலும் தேர்ச்சிப்பெறும் நிலை ஏற்பட்டது.
அரசுப்பள்ளி மாணவர்கள் நீட்தேர்வில் தேர்ச்சிப் பெற்றாலும் அவர்களால் மருத்துவக் கல்லூரியில் சேரமுடியாத நிலை ஏற்பட்டது. இதை தீர்க்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அரசு கொண்டு வந்தது. அந்த மசோதாவை ஜூன் மாதம் ஆளுநருக்கு அனுப்பியது.
ஆனாலும் அது ஒப்புதல் வழங்காமல் இருந்ததால் செப்டம்பர் 15 அன்று சட்டப்பேரவையில் மசோதாவாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது. ஆனாலும் அதற்கும் இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி மருத்துவ கலந்தாய்வு தொடங்க உள்ளது. ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பின்னரே கலந்தாய்வு என அரசு உயர் நீதிமன்றத்தில் அறிவித்ததால் கலந்தாய்வும் தள்ளிப்போகிறது.
இந்நிலையில் 5 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். திமுக தலைவர் ஸ்டாலினும் கடிதம் எழுதினார். அதற்கு பதில் எழுதிய ஆளுநர் தான் முடிவெடுக்க 3 வாரங்கள் வரை அவகாசம் தேவைப்படுவதாக பதிலளித்த விவகாரம் பெரிதாக கிளம்பியுள்ளது.
இந்நிலையில், 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு விரைந்து ஒப்புதல் தரக்கோரியும், ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் தர அதிமுக அரசு தவறியதாக கூறியும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி, கே.என். நேரு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.