‘போக்சோ’ வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள வேங்கை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரின் மகன் ராஜன் 22. இவருக்கும், கள்ளக்கொளத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கடந்த 2018ம் ஆண்டு, பள்ளியில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது, இந்த பழக்கத்தால் சிறுமி கர்ப்பமடைந்தார். இதில், ராஜன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அந்த சிறுமிக்கு, அதே ஆண்டில் ஆண் குழந்தை பிறந்தது.
அதன் பிறகு, அந்த சிறுமி தனது குழந்தையுடன், திண்டிவனம் அவரப்பாக்கம் தாடிக்காரன் குட்டைத்தெருவில் தாய் வனிதாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம், அந்த சிறுமி கழிவறைக்கு சென்றபோது, தனது ஒன்றறை வயது குழந்தை சஷ்வந்த் படிக்கட்டில் இருந்து கீழே தவறி விழுந்து மயக்கமடைந்ததாக கூறியுள்ளார்.
உடனடியாக குழந்தையை, தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர், மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஏற்கெனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
‘போக்சோ’ வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.