தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடதமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
மதுரை மாநகரப் பகுதிகளிலும், பரவை, சமயநல்லூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், முத்துகாளிபட்டி, உள்ளிட்ட பகுதிகளிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் சுற்றுப்பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அந்தப் பகுதிகளில் குளுமையான சூழல் நிலவியது.
இதனிடையே, வடதமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.