நடிகர் விஜயின், விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்பதை வரவேற்கிறோம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஆவடி மாநகராட்சி ஜே.பி எஸ்டேட் அருகே சரஸ்வதி நகர் பகுதியில் சுமார் 1.28 கோடி மதிப்பில் 19 தெருக்களில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மாநகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் உடன் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் மழையை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 5 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து பேசி நல்ல முடிவு வரும் எனக் கூறிய நிலையில் 7.5% இடஒதுக்கீடு வழங்க அதிமுகவுடன் இணைந்து போராட திமுக தயாராக உள்ளது எனக் கூறுவது தேவையற்ற ஒன்று. ஸ்டாலின் போராட பல்வேறு பிரச்னைகள் உள்ளது. அதற்காக போராடட்டும்.
விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்ற எஸ்.ஏ.சந்திரசேகரின் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், நடிகர் விஜய் ஜெயலலிதா இருக்கும்போது அதிமுகவிற்கு நேரடி ஆதரவு தெரிவித்தார். ஆனால் தற்போது அவரது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக நேரம் வரும்போது மாற்றுவேன் என அவரது தந்தை அறிவித்துள்ளார். அதனைதான் வரவேற்பதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM