முதியவர்கள் சாப்பிட வேண்டிய, தவிர்க்கவேண்டிய உணவுகள்!

  • முதுமையில் உணவுத் தேவை மாறுபடும். எதையும் அளவோடு சாப்பிடவேண்டிய காலம் வயோதிகக் காலம். பசியின்மை, மலச்சிக்கல் எனப் பல பிரச்னைகள் படையெடுக்கும்.

  • வயோதிகத்தில் உடலின் எடையில் 60 சதவிகிதம் தண்ணீர்தான் இருக்கும். இளமைக் காலத்தைவிட 10% குறைவாக இருக்கும். தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் பல பிரச்னைகள் ஏற்படும்.

  • உயர் ரத்த அழுத்தத்துக்கு, சர்க்கரை நோய்க்கு, மலச்சிக்கலுக்கு, இதயநோய்க்கு மருந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் நீர் இழப்பு ஏற்படும். சிலருக்குத் தலையில் மட்டும் வியர்க்கும். சிலருக்கு உடல் நடுக்கம் வரும். சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால் இதைத் தவிர்க்கலாம்.

ஆரோக்கியம் தரும் உணவுகள்
  • செல்களுக்கு இடையில் தங்கி உடலில் வயோதிக மாற்றத்தை வேகமாகத் தூண்டுவது ஃப்ரீ ரேடிக்கல்ஸ் (Free Radicals). அவற்றை இயற்கையாகவே கொண்டிருக்கும் க்ரீன் டீ, பப்பாளி, மாதுளை ஆகியவற்றைச் சாப்பிடுவதன் மூலம் எதிர்கொள்ளலாம்.

  • முதுமையில் பழங்கள் மிகவும் அத்தியாவசியமானவை. மலச்சிக்கலைப் போக்க கரையா நார்களையும், இதய ரத்தக்குழாய்களின் கொழுப்பை அகற்ற கரையும் நார்களையும், செல் அழிவைப் போக்க பாலிபினால்களையும், ஆற்றலை நீடித்துத்தர `காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்’டையும் தருபவை பழங்களே.

  • தினமும் உணவில் ஒரு பகுதியாக பழங்கள் இருக்கவேண்டியது முக்கியம். ஆனால் மாம்பழம், சப்போட்டா பழங்களை பேரன், பேத்திகள் சாப்பிடுவதைப் பார்த்து ஆனந்தப்படுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

  • அதிக வைட்டமின் சத்துக்கு, வைட்டமின் பி 6-ம், புரதச் செறிவு அதிகம் உள்ள பாசிப்பருப்பு போட்டுச் செய்த கீரைக் கூட்டு, பீன்ஸ் பொரியல் மற்றும் வைட்டமின் பி12 அதிகம் உள்ள கோழி ஈரல் கறி ஆகியவற்றை அவ்வப்போது சாப்பிடலாம்.

  • முதுமையில் கொழுப்புள்ள உணவுகளைக் குறைக்க வேண்டும். முழுமையாகத் தவிர்ப்பதும் நல்லதல்ல. நல்லெண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய் போன்ற எண்ணெய்களின் கலவையைக் கொஞ்சமாகப் பயன்படுத்துவது நல்லது.

  • முதுமையில் எலும்புத் தசைகளின் குறைவால், புரதச் சேமிப்பு குறைந்து உடல் மெலியும். அதை ஈடுகட்ட முளைகட்டிய பாசிப்பயறு, முட்டையின் வெள்ளைக்கரு, சத்துமாவு ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.

முதியோர்
  • மூட்டுவலியும் தசைவலிகளும் வயோதிகத்தின் அடையாளங்கள். இவை வராமல் இருக்க, வற்றல் குழம்பு, புளியோதரை போன்ற அமில உணவுகளுக்கு முதியோர் ஆசைப்படவே கூடாது. கடுக்காய், நெல்லிக்காய், கரிசலாங்கண்ணிக்கீரை போன்ற எளிய காயகற்ப மூலிகைகள் வயோதிகத்தின் வரப்பிரசாதங்கள்.

  • காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் சாப்பிடுவது வயோதிகத்தில் நோய் வராமல் காக்கும் மத்திரம்’ என்கிறது சித்த மருத்துவம். இதையும் பின்பற்றலாம்.

  • மருந்தோடு உன்னதமான உணவு, உற்சாகமான மனம் இவற்றோடு உரசல் இல்லாத உறவும் இருந்தால் மட்டுமே வயோதிக நோய்களை ஜெயிக்க முடியும். இதை வீட்டின் `வருங்கால வயோதிகர்’கள் உணரவேண்டியதும் அவசியம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.