மதுரையில் காய்ச்சிய சூடான பாலில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
மதுரை மேலமடை எழில்நகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதே பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதுரையில் பெய்த மழையால் பால் விற்பனையாகாமல் அப்படியே இருந்துள்ளது.
விற்பனையாகாமல் மீதமிருந்த பாலை தயிராக மாற்ற பெரிய வட்டையில் காய்ச்சி சூடான பாலை வீட்டின் நடுப்பகுதியில் வைத்திருந்துள்ளனர். அப்போது முத்துக்கிருஷ்ணனின் இரண்டு வயது மகன் பார்த்தசாரதி எதிர்பாராதவிதமாக சூடான பால் வைக்கப்பட்டிருந்த சட்டியில் விழுந்து படுகாயம் அடைந்தார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.