மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகளும் பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் நிலவுகிறது. காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டும் கூட, இங்கு ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகளுக்கான அனுமதியை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்நிலையில்தான் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் மற்றும் ஹைட்ரோ கார்பன் அனுமதி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற டெல்டா மாவட்ட கிராமங்கள் பல ஆயத்தமாகி வருகின்றன. மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட இன்னும் பல்வேறு அமைப்பகளும் இது தொடர்பாக, உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

டெல்டா

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் இது குறித்து பேசும்போது, “தமிழகத்தின் காவிரிப்படுகையும் கடலோரக் கிராமங்களும் பேராபத்தில் உள்ளன. வரைமுறையற்ற எண்ணெய்-எரிவாயுத் திட்டங்களாலும், எரிவாயுக் குழாய்ப் பதிப்பாலும் காவிரிப் படுகை மாவட்டங்களும் ராமநாதபுரம் மாவட்டமும் ஒட்டுமொத்த அழிப்புக்கு உள்ளாக இருக்கின்றன. சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களும் தப்பவில்லை. மரக்காணத்தில் இருந்து நாகை மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் வரை கடற்பகுதியிலும் எண்ணெய் – எரிவாயு ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் ஏலம் எடுத்துவிட்டுக் காத்திருக்கின்றன. கடற்கரைக் கிராமங்கள் காலியாகும் அபாயம் காத்திருக்கிறது. ஆகவே, இத்திட்டங்களைத் தடுத்து நிறுத்த கிராமசபைத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம். நாமும் நமது வருங்கால தலைமுறையினரும், நமது சொந்தக் கிராமங்களில் தொடர்ந்து வாழ, தமிழகத்தின் நெற்களஞ்சியமாகிய காவிரிப்படுகையில் வேளாண்மைத் தொடர, கடலோரக் கிராமங்கள், கடலுக்குள் அழிந்து போகாமல் தடுக்க, பாரம்பர்ய மீன் பிடித்தொழில் தொடர, இந்தத் தீர்மானங்களை இயற்றுவது அவசியம்.

நமது கிராமம் ஒரு வேளாண்மைக் கிராமம். நம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விளைநிலம், பொது நிலம், தனியார் நிலம் எதுவாக இருந்தாலும், அதில் எண்ணெய் – எரிவாயு கிணறுகளையோ, அதற்கான குழாய்களையோ அமைக்க, எந்தப் பெயரில் அத்திட்டம் கொண்டுவரப்பட்டாலும், அந்த நிறுவனம் அரசு நிறுவனம் ஆனாலும் அல்லது தனியார் நிறுவனம் ஆனாலும், அனுமதிப்பது இல்லை. உழவுச் சூழலை, ஊரின் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற வேறு எந்தத் தொழிலகங்களையும் அனுமதிப்பதில்லை எனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நம் உணவுக் களஞ்சியமும் நம் வரலாற்று வழி வேளாண் மண்டலமும் ஆகிய காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், வேளாண்மை மட்டுமே இங்கு நடக்க வேண்டும் என்பதே நம் கிராமத்தின் நிலைப்பாடு.

பேராசிரியர் ஜெயராமன்

விவசாயத்தைப் பாதிக்கும் வகையில், நம் ஊரின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரின் ஒப்புதலைப் பெறாத பாரத்மாலா திட்டத்தின் படியான சாலைகள், பெட்ரோ – கெமிக்கல் தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், சுற்றுச்சூழலையும வாழ்வுச் சூழலையும் பாதிக்கும் தொழிலகங்கள் ஆகியவற்றை அமைக்க அனுமதிப்பதில்லை எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். காவிரிப் படுகையில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களையும் கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் ஒரு பகுதியையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக அரசு சட்டமியற்றியுள்ளது. காவிரிப் படுகை முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிக்குள் சேர்க்கப்பட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட வேண்டும். கிராமப் பொருளாதாரத்தை முற்றிலும் பறித்துவிடக் கூடிய, ஒப்பந்த விவசாயம் என்ற பெயரில் உள்ளுர் விவசாயத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைக்கிற, விவசாயம், விவசாயி, விவசாயக்கூலிகள் அனைவரையும் பாதிக்கிற, வேளாண் சட்டங்கள் மூன்றையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் ஒப்பந்த விவசாயத்தை நம் ஊரில் அனுமதிப்பதில்லை எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். நம் மண்ணையும் மக்களையும் வாழ்வாதாரங்களைக் காப்பற்ற இத்தீர்மானங்கள் மிகவும் அவசியம்’’ எனத் தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.